வியாழக்கிழமை துறைமுக நகர் வாக்கெடுப்பு

வியாழக்கிழமை துறைமுக நகர் வாக்கெடுப்பு

பாராளுமன்ற அமர்வுகளை அடுத்தவாரம் மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (13) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் - 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும்
இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 19ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் 5.30 மணி வரையும், 20ஆம் திகதி விவாதம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் நடத்தப்படவுள்ளது.

மே 18ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, நிதிச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், முறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 8 கட்டளைகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்பமானதும் முற்பகல் 11
மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படும்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில், சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜொன்ஸ்ரன் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயகார மற்றும் அலி சப்ரி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, ரவூப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக, கயந்த கருணாதிலக, ரஞ்சித் மத்துமபண்டார, மனோ கணேசன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.