வெளிநாட்டு ஆதன முதலீடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம்
இலங்கையில் வதிகின்றவர்களிடையே வெளிநாட்டு அசையாச் சொத்தில் முதலீடுகளை (வெளிநாட்டு ஆதன முதலீடுகள்) ஊக்குவிக்கின்ற விளம்பரங்கள் அண்மைக்காலமாக அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதை இலங்கை மத்திய வங்கி அவதானத்தில் கொண்டுள்ளது.
அத்தகைய முதலீடுகளுக்கான வெளிநாட்டு நிதியிடலை பெறுவதற்கான வழிகாட்டலையும் இவ்விளம்பரங்கள் வழங்குகின்றன. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகளினதும் கட்டளைகளினதும் பிரகாரம் பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது:
1. அத்தகைய முதலீடுகள் ஐ.அ.டொலர் 20,000 அல்லது ஏதேனும் பெயர்குறிக்கப்பட்ட வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமனான தொகையைக் கொண்ட வரையறை வரை மேற்கொள்ளப்படுகின்ற கொடுப்பனவுகளைத் தவிர, வெளிநாட்டு ஆதனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது முதலீடுசெய்வதற்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வதிகின்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
2. வதிகின்ற நிறுவனங்கள் / தனிப்பட்டவர்கள் மூலம் பேணப்படும் வியாபார வெளிநாட்டு நாணய கணக்குகளிலிருந்து வெளிநாட்டு ஆதன முதலீடுகளுக்கான கொடுப்பனவுகள் அனுமதிக்கப்படவில்லை.
3. மேலும், வெளிநாட்டு ஆதன முதலீடுகள் உள்ளடங்கலாக ஏதேனும் நோக்கத்திற்காக வதியாதோரிடமிருந்து வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கோ அல்லது நிதியிடலைத் திரட்டவோ வதிகின்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேற்குறித்த சூழ்நிலைகளின் கீழ், வெளிநாட்டுச் ஆதன முதலீடுகளை ஊக்குவிக்கும்; அத்துடன் அத்தகைய நோக்கங்களுக்கான வெளிநாட்டு நிதியிடலைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற மேற்குறித்த விளம்பரங்கள் மூலம் தவறாக வழிநடாத்தப்படுவதற்கு இடமளிக்க வேண்டாமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு கண்டிப்பாக ஆலோசனை வழங்குகின்றது.
அத்தகைய அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடும் அல்லது வசதிப்படுத்தும் எவரேனும் ஆளுக்கு எதிராக வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Comments (0)
Facebook Comments (0)