DOக்களுக்கு 5 வருடங்களின்பின்னரே இடமாற்றம்: கிழக்கு ஆளுநர்

 DOக்களுக்கு 5 வருடங்களின்பின்னரே  இடமாற்றம்: கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர அரச சேவையில் இணையும் எவரும் அரசியல் அழுத்தங்களினால் இடமாற்றம் கோர வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

குறித்த நபர் பெறும் முதல் நியமனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனக்குக் கிடைத்த பணியின் கண்ணியத்தைக் காத்து நல்ல பொதுச் சேவையை ஆற்றி நாட்டுக்கு பாரமாக இல்லாமல் ஓய்வுபெற வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (26) காலை திருகோணமலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

"நீங்கள் அனைவரும் இலவசக் கல்வியின் பயனாளிகள். பல்கலைக்கழகம் வரை நீங்கள் அந்த இலவசக் கல்வியைப் பெற்றிருந்தீர்கள். பல்கலைக்கழக அளவில் இவ்வளவு இலவசக் கல்வியை வழங்கும் நாடு வேறு எங்கும் இல்லை. நாடு உங்களுக்காக  செய்த கடமையை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் அரசாங்க வேலை வழங்குவது என்பது ஒரு அரசால் செய்ய முடியாத ஒன்று. ஆனால் எங்கள் அரசாங்கம் அந்த சவாலை ஏற்றுக்கொண்டது.

அரச வேலை கிடைத்தவுடன், அரச சேவை செய்ய வேண்டும் என்ற பொறுப்பை மறந்து விடாதீர்கள். எங்களிடம் வரும் அப்பாவி மக்களுக்கு அந்த சேவையை அன்புடன் வழங்க வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் படிகோரள, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பி.எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சபையின் கீழ் 2,000 பட்டதாரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி 600 பட்டதாரிகளுக்கு மாத்திரமே இன்றைய நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனைய 1,400 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.