'மக்கள் காங்கிரஸின் தலைவர் பதவியில் எந்தவித மாற்றமுமில்லை'

'மக்கள் காங்கிரஸின் தலைவர் பதவியில் எந்தவித மாற்றமுமில்லை'

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பதவியில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அதில் எந்தவித மாற்றமுமில்லை எனவும் அக்கட்சியின் உயர் பீட உறுப்பினரும் சட்ட ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கட்சித் தலைவரின் சில அதிகாரங்களை செயற்படுத்துவதற்கான அதிகாரத்தினை கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் என்.எம். சஹீட்டுக்கு வழங்குவதற்கு கடந்த அரசியல் உச்ச பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இதுவொரு பதில் தலைவர் நியமனமல்ல. கட்சி தலைவரின் சில அதிகாரங்களை பயன்படுத்துவதற்காகன அனுமதி என்.எம்.சஹீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீனின் வழிநடத்தலிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.