கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதியின் தன்னார்வத் திட்டம்

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதியின் தன்னார்வத் திட்டம்

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதியின் தன்னார்வத் திட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க  சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலுமே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தினாலேயே தன்னார்வத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மையத்தினால் இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வலஸ்முல்ல வைத்தியசாலையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதனை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. இது போன்றதொரு தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரண மையம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் நடத்தியது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கல் போன்றன இடம்பெற்றன.

இதேவேளை, இத்திட்டத்தின் ஊடக 4,723 மருத்துவப் பரிசோதனைகளும் 457 லென்ஸ் பொருத்துதலும் 967 கண்ணாடி விநியோகமும் 467 அறுவை சிகிச்சைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.