முதல் தடவையாக சகல ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் யோகா தின நிகழ்வுகள்
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவை ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் முகமாக கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரையில் நாடளாவிய ரீதியிலான யோகா நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.
வரலாற்று ரீதியில் முதல் தடவையாக இவ்வாறு நடைபெற்றிருக்கும் சர்வதேச யோகா தின நிகழ்வின்போது சம நேரத்தில் இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 113 ஆயுர்வேத மருத்துவமனைகள், நான்கு பல்கலைக்கழகங்கள், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்திருந்தன.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு மேலதிகமாக 11ஆவது சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் பிரதான நிகழ்வுகள் இன்று - 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:30 மணி முதல் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒழுங்கமைப்பில் இந்த அமர்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சம நேரத்தில் யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இந்திய இராஜதந்திர அலுவலகங்களின் தலைமையில் நடைபெறும் யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் யோகா உள்ளுணர்வை விஸ்தரிக்கின்றன.
இலங்கை அரசின் சுகாதார அமைச்சின் கீழான ஆயுர்வேத திணைக்களம் இலங்கையில் பாரம்பரிய, சுதேசிய மற்றும் ஆயுள்வேத மருத்துவ முறைகளை பாதுகாப்பதிலும் அவற்றை கட்டுப்படுத்தி அம்முறைமைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு வாய்ந்த முக்கிய அரசாங்க நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.
சுகாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகளை முழு அளவில் முன்னெடுத்து வரும் ஆயுள்வேத திணைக்களம், ஆயுள்வேத சுகாதார பராமரிப்பு சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் யோகாவை மேம்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் இலங்கையில் உள்ள ஆயுள்வேத நிறுவனங்களின் ஒட்டுமொத்த வலையமைப்பும் முதல் தடவையாக ஒன்றிணைந்து கலந்துகொண்டிருந்தமை சிறப்புக்குரியதாகும்.
இந்நிகழ்வுக்காக யோகா விரிப்புகள், செயல்முறை விளக்க நூல்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் போன்றவை இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சகல நிலையங்களுக்கும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தினால் வழங்கப்பட்டிருந்தன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய சுகாதார பராமரிப்பு முறைகள் சார்ந்த உறவுகளை வலுவாக்கும் அதேவேளை உடல் உள மற்றும் ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்திற்கான சக்தி வாய்ந்த கருவியாக யோகாவானது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு வருவதனை சுட்டிக்காட்டுவதாகவும் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இந்நிகழ்வு அமைகின்றது.
“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற தொனிப் பொருளில் 2025 சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் எமது பூமியின் ஆரோக்கியம் மற்றும் ஒவ்வொருவரதும் நலன்கள் இடையிலான தொடர்பினை பிரதிபலிப்பதாக அத்தொனிப்பொருள் அமைகின்றது.
உடல், மனம் மற்றும் இயற்கை இடையிலான அமைதியினை அடிப்படையாகக் கொண்டு உருவான புராதான செயன்முறையே யோகாவாக காணப்படும் நிலையில், இது உலக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான உறுதியானதும் சமநிலையானதுமான வாழ்க்கை முறையினை மேம்படுத்துகின்றது.
இந்த பிரபஞ்ச செய்தியானது பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டதுடன், 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் அவர் முன்வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரேரணை ஜூன் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வழிவகுத்தது.
அன்று முதல் யோகா தினம் ஓர் உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை உள் அமைதி மற்றும் ஐக்கியத்துடனான நல்வாழ்வை வளர்ப்பதற்கான ஒரு மார்க்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.
Comments (0)
Facebook Comments (0)