முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் இராஜினாமா

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் இராஜினாமா

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து ஏ.பீ.எம். அஷ்ரப் இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமாக் கடிதத்தினை கடந்த ஜனவரி 1ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வருட காலப் பகுதியில் இந்த திணைக்களத்தினை மக்களின் காலடியில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கொவிட் - 19 முடக்கத்திற்கு மத்தியில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை இவரின் ஆலோசனையின் பிரகாரம் முதற் தடவையாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

அது மாத்திரமல்லாமல், சூபி மற்றும் தரீக்கா பிரிவினரை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கையினை இவர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் இலங்கையின் அடையாளம் மற்றும் முஸ்லிம்களின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் உதவி பணிப்பாளரொருவரின் கீழ் அதற்காக தனி பிரிவொன்றினை உருவாக்கியமை முக்கிய விடயமாகும்.