டோஹாவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவிப் பொதிகளை விநியோகம்

 டோஹாவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவிப் பொதிகளை விநியோகம்

கட்டாரின் தலைநகரான டோஹாவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்கும் முயற்சியாக, உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாக விநியோகித்து வருகின்றது.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்த 6,700 கிலோ (1,000 பொதிகள்) உதவிப் பொருட்கள் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த உதவிப் பொதிகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறப்பு சரக்கு விமானம் கட்டணங்கள் எதுவுமின்றி டோஹாவுக்கு கொண்டு சென்றதன் மூலமாக, இந்தப் பணிகளில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது.

இந்த உதவிப் பொதிகளை டோஹாவில் வசிக்கும் தேவைகளையுடைய இலங்கையர்களுக்கு தூதரகம் விநியோகிக்கவுள்ளது. மேலும், டோஹாவிலுள்ள இலங்கையின் சங்கங்கள், கட்டார் தொண்டு நிறுவனம், கட்டார் உள்விவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியவற்றின் உதவியுடன் இதுவரை 5,000 உலர் உணவுப் பொதிகளை தூதரகம் விநியோகித்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள தேவைகளையுடைய இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் அதேவேளையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கட்டார் அரசாங்கத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், டோஹாவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகளில் இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தொடர்ந்தும் ஈடுபடும்.