பாராளுமன்ற கோப் குழு 20 முதல் 24 ஆம் திகதிவரை கூடுகிறது

பாராளுமன்ற கோப் குழு 20 முதல் 24 ஆம் திகதிவரை கூடுகிறது

மத்திய அதிவேக வீதியின் ஆய்வு மற்றும் கொள்முதல் செயல்முறை குறித்த சிறப்பு அறிக்கையை பரிசீலிப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரச் சபை மற்றும் மத்திய அதிவேக பாதை செயற்திட்டப் பிரிவு ஆகியன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவுக்கு (கோப்) ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கோப் குழு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்றத்தில் கூடும் என்று அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி களனி நதி மாசுபடுதல் குறித்த சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதோடு நீர்பாசன திணைக்களம், முதலீட்டுச் சபை மத்திய சுற்றுச்சூழல் திணைக்களம் மற்றும் தொடர்புடைய உள்ளுராட்சி அமைப்புகள் கோப் குழுவுக்கு வரவழைக்கப்படவுள்ளன.

அதன் பிறகு, இலங்கையில் பெட்ரோலியத்தை சேமித்து வைப்பது தொடர்பான சிறப்பு திட்டத்தின் அறிக்கை குறித்து விவாதிக்க ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனமும் கோப் குழுவுக்கு வரவழைக்கப்படவுள்ளது என பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

மேலும், தெங்கு அபிவிருத்தி திணைக்களம் ஒக்டோபர் 23 ம் திகதி கோப் குழு முன் வரவழைக்கப்படவுள்ளது. இதற்கும் மேலதிகமாக, தெங்கு உற்பத்தி சபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியனவும் அன்றைய தினம் கோப் குழு முன் வரவழைக்கப்படவுள்ளன.