கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான தகவல்களை வழங்க அம்பாறை கச்சேரி மறுப்பு

கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான தகவல்களை வழங்க அம்பாறை கச்சேரி மறுப்பு

றிப்தி அலி

கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலக தகவல் அதிகாரியும் மேலதிக மாவட்ட செயலாளருமான வீ. ஜெகதீஸன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விடியல் இணையத்தளத்தின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலகம் உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உப பிரதேச செயலகங்கள் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் "2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச்சட்டத்தின் 5ஆவது பிரிவின் முதலாவது சரத்தின் கீழ் இந்த தகவல்களை வழங்குவது விலக்களிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்து குறித்த தகவல் அறியும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் விபரங்களை இந்த விண்ணப்பத்தின் ஊடாக கோரிய போது, "இந்த விபரங்களை தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்து இராஜாங்க அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது" எனவும் மாவட்ட செயலக தகவல் அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.