சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்

தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான ஆர். சிவராஜாவை, அடையாளம் தெரியாத இருவர் பின்தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வசந்தம் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை சிவராஜா, தொகுத்து வழங்கிவிட்டு  இன்று (12) வியாழக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர் சிவராஜா வசிக்கும், தொடர்மாடி குடியிருப்புக்கு, அடையாளம் தெரியாத இருவர் வருகைத் தந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சிவராஜா, தனது பேஸ்புகில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, தொடர்மாடி குடியிருப்பு பாதுகாப்பு உத்தியோகத்தரிடம், தன்னை பற்றி விசாரித்த அடையாளம் தெரியாத இருவரும், தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என பலவந்தப்படுத்தியதாக ஊடகவியலாளர் சிவராஜா தெரிவித்தார்.

"தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், பொலிஸாருடன் வருமாறு, தமது குடியிருப்பு பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த இருவருக்கும் கூறிய நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நீண்ட நேர முரண்பாட்டில் இருவரும் ஈடுபட்டு, பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ் மாஅதிபருக்கு முறைபாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.