அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி: போர்க்கொடி தூக்கினார் அதாஉல்லா

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி: போர்க்கொடி தூக்கினார் அதாஉல்லா

அம்பாறை மாவட்டத்தின் பெயரை "திகாமடுல்ல" என மாற்றுவதற்கு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பாரிய எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இதனால் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிற்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோருக்கு இடையில் மாதாந்தம் நடைபெறும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக வாக்குவாதம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறன நிலையில் இன்று இடம்பெற்ற வாக்குவாதம் பல நிமிடங்கள் நீடித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

"அம்பாறை மாவட்டத்திற்கு அம்பாறை நிர்வாக மாவட்டம் என்றும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் என்றும் இரண்டு பெயர்கள் காணப்படுகின்றன. இதில் திகாமடுல்ல எனும் பெயரை நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் சூட்டுவோம் என்ற பிரேரணை இன்றைய அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா பாரிய எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் தற்போது கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளளார். அத்துடன்  இது விரிவாக கலந்துரையாடப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இராஜாங்க அமைச்சர் ஆத்திரமடைந்ததை அடுத்தே இருவருக்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பெயர் மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌசாத்தும் இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் டி. கலையரசன் உள்ளிட்ட சிறுபான்மையின பிரதிநிதிகள் எவரும் எந்த கருத்தினை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.