புத்துயிர் பெறும் இலங்கைக்கு அத்தியவசியமான ஊழலுக்கெதிரான சீர்திருத்தங்கள் தொடர்பில் பதினைந்து அம்சத் திட்டம்

புத்துயிர் பெறும் இலங்கைக்கு அத்தியவசியமான ஊழலுக்கெதிரான சீர்திருத்தங்கள் தொடர்பில் பதினைந்து அம்சத் திட்டம்

கடந்த காலங்களை கருத்திற்கொண்டு நோக்கும் போது 2022ஆம் ஆண்டானது கொந்தளிப்பான ஆண்டாகவே காணப்படுகிறது. வெளிநாட்டுக் கடனை மீள செலுத்த முடியாத மோசமான நிலையில் தள்ளாடிக்கொண்டிருப்பதனால் இந்நிலைமை சீரடைவதற்குள் இன்னும் மோசமான நிலைமைக்கு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை, பொதுச் சொத்துக்களின்  தவறான முகாமைத்துவம், ஊழல் நிறைந்த அதிகார பலத்தைக் கொண்ட குழுக்கள் நாட்டை சூறையாடுதல், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையிலான ஊழல் முறைமைகள் மற்றும் அரச ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை இல்லாமை ஆகிய விடயங்களே தற்பொழுது நிலவும் நெருக்கடிக்கு முக்கிய காரணங்கள் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் நாட்டின் தலைவர்களின் செயற்பாடுகள் அல்லது செயலற்ற தன்மை ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறதா அல்லது இன்னும் பாதகமான நிலைக்கு இட்டுச் செல்கிறதா என்பதை தீர்மானிக்கும்.

இவை நாட்டு மக்களின் வாழ்க்கையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆகவே, எந்தவொரு பொருளாதார மீள்ச்சித் திட்டத்தையும் நாடு வினைத்திறனாக செயற்படுத்த வேண்டுமானால் தற்பொழுது இடம்பெறுகின்ற மற்றும் இடம்பெற சாத்தியமான ஊழல் செயற்பாடுகளை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்கையில் அதியுயர் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் அவசியமாகும்.

ஆகவே, அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொள்கைகள், சட்டங்கள், கட்டமைப்பு மற்றும் முறைமைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற இடைவெளிகள் ஊழலுக்கு வழிவகுக்கா வண்ணம் கையாளப்படுவது மிக முக்கியமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் வலுவான பொருளாதார மீள்ச்சித் திட்டம் தேவையாக இருந்தாலும், அத்தகைய மக்கள் நம்பும் பொருளாதார திட்டமொன்றினை செயற்படுத்துகையில் அது ஊழலுடன் தொடர்புடையதாக அல்லது ஊழலுக்கு வழிவகுக்கக்கூடியதாக கருதப்பட்டால், குறித்த திட்டமானது மக்களால் புறக்கணிக்கப்பட்டு இதனால் ஏற்படும் சுமையினையும் மக்களே சுமக்க நேரிடும்.

மேற்கூறியவற்றின் அடிப்பைடயில், இலங்கையானது தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டு உண்மையான மாற்றத்தினை அடைந்துக்கொள்ள ஊழலுக்கு எதிரான நீண்டகால அடிப்படையிலான முக்கிய மற்றும் உடனடி சீர்த்திருத்தங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளின் தொகுப்பை TISL நிறுவனம் முன்வைக்கிறது.

1. உயர் மட்டத்திலிருந்து கட்டமைத்தல் 

தலைமைப் பொறுப்பினை ஏற்கக்கூடியவர்கள் அவர்களின் பதவிக்கு தேவையான அடிப்படை அறிவு மற்றும் திறன்களுடன் நாட்டிற்குச் சேவை செய்வதில் அவர்களின் நேர்மை மற்றும் உண்மையான அர்ப்பணிப்பினை குறித்துக் காட்டும் ஓர் தடப் பதிவைக் கொண்டிருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

தலைவர்கள் தமது சொற்களுக்கு அப்பால் தமது செயல்களில் பிரதிபலிக்கும் வண்ணம் ஓர் வலுவான "ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாத கொள்கை" எனும் ஊழலுக்கெதிரான கொள்கையை தலைவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
 
2.    தற்போதைய நெருக்கடியினை தீர்க்கும் முகமாக மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களிலும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்தல்

வெளிநாட்டு உதவி மற்றும் பெறப்பட்ட கடன்கள் தொடர்பான தகவல்களையும், அத்தகைய நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, நிதி அமைச்சு உட்பட ஏனைய தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு திறந்த டிஜிட்டல் தளத்தினை அறுமுகப்படுத்தல்.

பொருளாதார மீள்ச்சித் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கும், முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள முன்னர் அவற்றுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை பெறுவதற்கும் அடிக்கடி மற்றும் வழக்கமான ஊடக சந்திப்புக்களை நடத்துவது அவசியமாகும்.

3.    20 ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல் 

19 ஆம் திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஆனால் 20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்ட அரச நிர்வாக பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை சரிபார்க்க அதிகாரமளிக்கும் ஏற்பாட்டினை மீண்டும் நடைமுறைப்படுத்தல்.
 
4.   பொது நிதி தொடர்பில் பாராளுமன்ற மேற்பார்வையை வலுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல்

தற்போது நடைமுறையிலுள்ள நிதி ஒழுங்குமுறைகளை தற்போதைய காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் ஒரு விரிவான நிதிச் சட்டமாக மாற்றுவதனூடாக பாராளுமன்ற மேற்பார்வையினை உறுதிப்படுத்தவும் பொது நிதி மீதான கட்டுப்பாடுகளை நெறிப்படுத்தவும் முடியும். மேலதிகமாக, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) மற்றும் பொது நிதிக்கான குழு (CPF) ஆகியவற்றின் நிதி மேற்பார்வை வழிமுறைகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்படல் வேண்டும்.

5. பொதுக் கொள்முதலில் கட்டாய பொறுப்புக்கூறல் நடைமுறையினை அறிமுகப்படுத்தல் 

பொதுக் கொள்முதலானது பாரியளவான ஊழலுக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு செயல்முறையாக காணப்படுவதனால் தற்போது நடைமுறையிலுள்ள தேசிய கொள்முதல் வழிகாட்டல்களை ஒரு சட்டமாக இயற்றுதல் மற்றும் குறிப்பிடப்படாத அல்லது கோரப்படாத முன்மொழிவுகளின் (unsolicited proposals) போது பின்பற்ற வேண்டிய கட்டாய நடைமுறையை நிறுவுதல். பொதுக் கொள்முதல்களை மேற்பார்வை செய்வதற்காக தேசிய கொள்முதல் ஆணைக்குழுவினை மீண்டும் நிறுவுதல், அதிகாரமளித்தல் என்பனவும் முக்கியமானதாகும்.

6.  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குதல் 

எமது அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு தனி நபர் மீது கூடிய அதிகாரத்தை குவிப்பதற்கு வழிவகுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இம்முறைமையானது அதிகார துஷ்பிரயோகத்தினூடாக பெரும்பாலும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க வழிவகுக்கும். ஆகவே பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் பிரதமர் மற்றும் அமைச்சரவை கொண்ட முறைமை ஒன்றினை உருவாக்குவது அவசியம்.

7.    சட்ட அமுலாக்க அதிகார சபைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குறித்த அதிகார சபைகள் சுதந்திரமாக இயங்குவதை உறுதிப்படுத்தல், அதனூடாக குறித்த சபைகளினால் அரசியல் அதிகாரம் அல்லது சமூக அந்தஸ்து என்பவற்றை பொருட்படுத்தாமல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அச்சமின்றி செயற்பட முடியும்.

8.    அரச பொது அதிகாரிகளின் சுதந்திரத்தை மேம்படுத்த தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதனூடாக பொதுச் சேவையில் அரசியல் தலையீட்டை நீக்கும் செயல்முறையை ஆரம்பித்து வைத்தல்.

9.    அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் தொடர்பாக COPE, COPA மற்றும் COPF அமைப்புக்களினால் அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களில் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

10.    அனைத்து பொதுத் தொழில் முயற்சிகள் நிறுவனங்களிலும் (State-owned enterprises) ஓர் உடனடி கணக்காய்வினை மேற்கொள்ளல்

இழப்புக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிந்து இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்கும் வண்ணம் அனைத்து பொதுத் தொழில் முயற்சிகள் நிறுவனங்களிலும் (SOEs) நிதிக் கணக்காய்வினையும், மதிப்பாய்வினையும் மேற்கொள்ளல். ஆகவே இதனூடாக கிடைக்கும் சேமிப்புக்களானது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு உதவியளிக்கும்.

11.    திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல்

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அதிகாரிகளின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் காணப்படும் சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள், சொத்து தடமறிதல் மற்றும் சொத்து மீட்பு செயல்முறைகளை சட்ட அமுலாக்க அதிகார சபைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

12. சொத்துக்களை எம்மிடம் வெளிப்படுத்துங்கள்

பொதுமக்களின் கோரிக்கையினை மதித்து அரசியல் கட்சிகள் தங்களது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும். அதேபோல் அவர்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடங்களை பொதுமக்களுக்கு தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் வகையில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இதனூடாக இவர்களின் சொத்துக்களானது சமூக ரீதியான கணக்காய்வுக்கு வழிவகுக்கும். சொத்துப் பிரகடனங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், குறித்த பிரகடனங்களை பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்குதல் மற்றும் பிரகடனங்கள் தொடர்பாக ஏற்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மற்றும் குறித்த பிரகடனங்களை மீள் பரிசீலனை செய்யக்கூடிய வகையில் பதிவுப் பராமரிப்பை மையப்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்தல்.

13.    செயற்படுத்துனர்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் 

அரச அதிகாரிகள், பெரு வணிகர்கள்/ வணிகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள் போன்ற அனைவரும் பாரியளவான ஊழல் செயற்பாடுகளுக்கு வழிவகுத்து ஆதரிக்கின்ற ஊழல் நிறைந்த அதிகார பலத்தைக் கொண்ட குழுக்களின் வட்டத்தின் ஒரு பகுதியினராக காணப்படுகின்றனர்.

அரசாங்க சேவை ஆணைக்குழு, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, தேசிய வர்த்தக சபை, சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய நிறுவனம் மற்றும் நாட்டின் குடிமக்கள் ஆகியோர் ஊழலுக்கெதிரான கண்காணிப்புக் குழுக்களாகச் செயற்படுவதுடன் மேலே குறிப்பிட்ட பாரியளவான ஊழலுக்கு வழிவகுக்கக் கூடிய குழுக்களிடமிருந்து வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோர வேண்டும்.

14.    குற்றச்செயல்களினால் பெறப்பட்ட வரும்படிகள் குறித்த முன்மொழியப்பட்ட சட்டத்தை அறிமுகப்படுத்தல்

இச் சட்டமானது வெளிநாடுகளில் உள்ள திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான அனைத்து விடயங்களையும் கையாளும். இந்த சட்டத்தினூடாக இலங்கையானது மீட்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க சுதந்திரமான சொத்து முகாமைத்துவ ஆணைக்குழு ஒன்றினை நிறுவ முடியும்.

15.    மக்கள் பிரதிநிதிகளின் ஊழலின் ஓர் தொடக்க புள்ளியாக காணப்படும் தேர்தல் பிரசார நிதியினை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தினை அறிமுகப்படுத்தல்.

TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில், "நாட்டை மேம்படுத்த அத்தியாவசியமான முறைமை மற்றும் கலாசார மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் ஊழலின் வகைகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் மற்றும் தெளிவுக்கான தேடல்களை தொடர்ந்து தீவிரமாக ஆராயுமாறும் நாட்டு மாக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருவதில் நாமும் மக்களுடனே நிற்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எமது வாழ்நாளில் எமக்கு கடினமானது/ சாத்தியப்படாது என நினைத்த மாற்றத்தினை உருவாக்க முடியும்" என அவர் குறிப்பிட்டார்.