ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்

ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் விசேட கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று (05) வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னாள் மேயர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அதனூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பாவிப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் ஊடாக  தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அரச சொத்து துஷ்பியோகப்படுத்தப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் தினம் குறிப்பிடப்படாமல் வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில்  இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும்.

அதேபோன்று இந்த நியமனத்தின் ஊடாக அரச சொத்துக்கள் பாவிக்கப்படுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்பதையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர் வசமே காணப்படுவதனால் இவ்வாறு அரச சொத்து துஷ்பிரயோகத்துக்கு துணை போகக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.