துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் குர்ஆன்களை வெளியில் எடுப்பத்தில் தொடர்ந்தும் தாமதம்

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் குர்ஆன்களை வெளியில் எடுப்பத்தில் தொடர்ந்தும் தாமதம்

றிப்தி அலி

கடந்த 50 நாட்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்ற  புனித அல்குர்ஆனைகளை விடுப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் குறித்த குர்ஆன்களை வெளியில் எடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை உரிய நபர்களினால் முன்னெடுக்கப்படவில்லை என சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் மற்றும் அதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் ஆகியவற்றினை கொண்ட கொள்கலன் கடந்த ஜுன் 22ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.

இதில் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிரதிகளும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும், இஸ்லாமிய நூல்களும் காணப்படுவதாக ஸாதிக் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலனிலுள்ள அரபு மொழி மூலமான புனித அல்குர்ஆன்களை மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு,  கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சும் அரபு மொழியிலுள்ள புனித அல்குர்ஆன்களை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அரபு மொழியிலுள்ள புனித அல்குர்ஆன்களை துறைமுகத்திலிருந்து வெளியில் எடுப்பதற்கு நேற்று (14) புதன்கிழமை வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் மக்காவிலுள்ள சாதீக் ஹாஜியாரை வட்ஸ்அப்பின் ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை. குறித்த அல்குர்ஆன்கள் துறைமுகத்தில் கடந்த 50 நாட்களாக தேங்கிக் கிடந்தமைக்காக சுமார் 30 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு துறைமுக அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்ற புனித அல்குர்ஆன் மற்றும் அதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் ஆகியவற்றினை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.