சவூதி சுனாமி வீட்டு திட்டம் விரைவில் அப்பிரதேச மக்களுக்கு கையளிக்கப்படும்: ஜனாதிபதி

சவூதி சுனாமி வீட்டு திட்டம் விரைவில் அப்பிரதேச மக்களுக்கு கையளிக்கப்படும்: ஜனாதிபதி

சவூதி அரேபியாவினால் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தினை மிக விரைவில் இப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (11) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளைக் கொண்ட இந்த வீட்டுத் திட்டத்தின் நன்மையினை மக்கள் இன்னும் அடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் என்னிடம் மிகவும் கவலைப்பட்டு பேசினார். அத்துடன் இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குமாறும் சவூதி தூதுவர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

குறித்த விடயத்திலுள்ள பிரச்சினைகளை தீர்த்து இப்பிரேச மக்களுக்கு குறித்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை விரைவில் கையளிக்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் கூறினார்.

அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (11) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்றில் கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பினை மேற்கொண்டார்.