கிழக்கிலுள்ள தொல்பொருள் மையங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி நியமனம்

கிழக்கிலுள்ள தொல்பொருள் மையங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான இந்த செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஒன்றுகூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பௌத்த ஆலோசனைச் சபையின் இரண்டாவது கூட்டம்  ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது மற்றும் சேதமாக்கப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் பல விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஒன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

பௌத்த சமயத்திற்கும் திரிபீடகத்திற்கும் முரணாக சில பிக்குகளின் செயற்பாடுகள் உள்ள காரணத்தினால் பௌத்த சாசன உரையாடலொன்றின் தேவை குறித்து மகா சங்கத்தினர் விரிவாக ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினர்.

அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பதனையும் மற்றும் ஏனைய பரிந்துரைகளையும் சமர்ப்பித்தால், தனது பதவிக் காலத்தில் அவற்றுக்குத் தேவையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் 19 நோய்த் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எமது நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்து எமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் பணியை மகா சங்கத்தினர் இந்த கூட்டத்தில் பாராட்டியுள்ளனர்.

ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எழுமானமாக எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மகா சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கூறினார்.

பிரிவெனா மற்றும் பாடசாலை கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்தும் பௌத்த ஆலோசனை சபை விரிவாக கலந்துரையாடியது. இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைக் கல்வித் திட்டத்திலிருந்து நீக்குவதற்கு கடந்த சில காலகட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

நாடெங்கிலும் பரவியுள்ள போதைப் பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு விரிவான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மகாசங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் மகாசங்கத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போது - கடந்த குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டினுள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்ற எம்மால் முடிந்திருக்கின்றது என்பதனை ஜனாதிபதி அவர்களுக்கு நினைவூட்டினார்.

இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் பிரச்சினையை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான எனது பொறுப்பை நான் முழுமையாக நிறைவேற்றுவேன் எனவும், அதற்காகத் திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நான் நியமித்துள்ளேன் என்பதனையும் ஜனாதிபதி இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

புலனாய்வுத் துறை பலப்படுத்தப்பட்டு முழுமையான அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்குப் பாதுகாப்பு தரப்புக்கு உரிய ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன என்பதனையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமான ஊடக நடத்தையை மகா சங்கத்தினர் விமர்சித்தனர்.

உலகின் அனைத்து நாடுகளும் கொவிட் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையைப் பாராட்டும் போது எதிர்க்கட்சிகள் மட்டும் நேர்மையற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் எதர்ப்பது வெறுக்கத்தக்கதாகும் என்றும் தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

கொவிட் நோய்த்தொற்றினால் குழம்பிப் போயிருக்கும் சமூகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் மகாசங்கத்தினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதுடன், அதற்காக, பிக்குமார்களைக் கொண்ட குழுவொன்றை விரைவில் நியமித்து உரிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த கூட்டத்தில் மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் நியங்கொட விஜிதசிறி தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் வெண்டருவே உபாலி தேரர், கலாநிதி பஹமுனே சுமங்கள தேரர், கலாநிதி மெதகம தம்மானந்த தேரர், ருவன்வெலி மகா சேய விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், அமரபுர மகா நிகாயவின் திருக்குணாமலயே ஆனந்த தேரர், தென் இலங்கை பிரதான சங்கநாயக்கர் மெடரம்ப ஹேமரத்ன தேரர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.