மட்டு. போதனா வைத்தியசாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனை ஆரம்பம்

மட்டு. போதனா வைத்தியசாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனை ஆரம்பம்

எம்.பஹ்த் ஜுுனைட்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் விசேட பீசீஆர் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பீ சீஆர் பரிசோதனை கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்றுவருவதாகவும் இதுவரை 143 பேருக்கான பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு கோரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 நோயாளர்களில் 8 பேர் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.

கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு, இங்கு வரும் கொரோனா நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் குணங்குறியுள்ளவர்களையும் இப்பிரிவிற்குள் எடுப்பதற்கு பிரத்தியேக வாயல் அமைக்கப்படடிருந்தது.

தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவரித்தார்.

தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும், அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனியின் பிரதானியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுனருமான டாக்டர் எஸ். மதனழகன், நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகி, மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.