ஊரடங்கு தளர்த்துதல் சம்பந்தமான ஜனாதிபதி ஊடக பிரிவின் விசேட அறிவித்தல்

ஊரடங்கு தளர்த்துதல் சம்பந்தமான ஜனாதிபதி ஊடக பிரிவின் விசேட அறிவித்தல்

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியிலும், பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படும் விதம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை இன்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினமே மீண்டும் இரவு 8 மணிக்கு மீள பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். இதேவேளை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அலவத்துகொட, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த மூன்று மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இது தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்  கம்பாஹ மாவட்டத்தின் ஜாஎலை, சீதுவ மற்றும் கொச்சிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

புத்தளம், களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஏப்ரல் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.