பாகிஸ்தானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 2ஆவது வீதி நூலகம் கண்டியில் திறப்பு

  பாகிஸ்தானினால் இலங்கைக்கு நன்கொடையாக  வழங்கப்பட்ட 2ஆவது வீதி நூலகம் கண்டியில் திறப்பு

இரு நாடுகளுக்கிடையிலான  நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மக்களின் சார்பாக  இலங்கையின் இரண்டாவது வீதி நூலகம் கடந்த புதன்கிழமை (05) கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் இந்நூலகத்தில் காணப்படும். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் பர்க்கி மற்றும் கண்டி மாநகர சபையின் ஆணையாளர் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி நூலகத்தை ஆரம்பித்ததுடன் அதனைத் தொடர்ந்து நூலக நிர்வாகத்தின் ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.

கண்டி சிட்டி சென்டருக்கு அருகிலுள்ள சஹாஸ் உயனவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பொதுப் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தை அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம்.

"வீதி நூலகம்" என்ற திட்டத்தின் கீழ், இந்நூலகத்தில் கட்டிடம் மற்றும் புத்தகங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நூலகம் மற்ற நூலகங்களை விட வித்தியாசமானது.  “புத்தகம் ஒன்றை வைத்து விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்தல்” என்ற அடிப்படையில் இந்நூலகம் செயல்படும்.

இங்கே நூலகர் என்று யாரும் இல்லை. யாரும் இங்கு வந்து புத்தகங்களைப் படிக்கலாம். மேலும், வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் விருப்பப்படி வேறு புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.