ஜூன் 21ஆம் திகதி இலங்கையில் 8ஆவது சர்வதேச யோகா தினம்

ஜூன் 21ஆம் திகதி இலங்கையில் 8ஆவது சர்வதேச யோகா தினம்

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம், ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் மற்றும் கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை இணைந்து, 8ஆவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் முகமாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 2022 ஜூன் 21ஆம் திகதி நிகழ்வுகள் பலவற்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

“மனிதத்திற்காக யோகா” என்ற தொனிப்பொருளின் கீழ் பாரிய பொது நிகழ்வொன்று அன்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் காலை 06.00 மணிமுதல் நடைபெறவுள்ளது. இலங்கையின் கலாசார அமைச்சு உட்பட பல்வேறு பங்காளர்களின் ஒன்றிணைவுடன் நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்களும் இலவசமாக பங்கேற்க முடியும்.

இதேவேளை பல்வேறு நாடுகளிலிருந்தும் யோகா ஆர்வலர்கள் பங்கேற்கும் "Guardian Ring" எனப்படும் கிழக்கிலிருந்து மேற்கு வரை சூரியனின் இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு புதுமையான நிகழ்வொன்று சர்வதேச யோகா தினத்தின் எட்டாவது பதிப்பின் விசேட அம்சமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக பிரகடனம் செய்யக்கோரும் இந்தியாவின் பிரேரணை 2014இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்துக்கு 170க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு வழங்கியிருந்த அதேசமயம் இணை அனுசரணை வழங்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆயுர்வேதம் போன்றே யோகாவும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொதுவான மரபுகளின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. இலங்கை தலைவர்களின் பங்கேற்புடன் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள இந்திய இராஜதந்திர அலுவலகங்கள் சர்வதேச யோகா தினத்தை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றன.

கடந்த ஆண்டுகளில் சராசரியாக பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். கொவிட் 19 காரணமாக நிகழ்வுகளை நேரடி பிரசன்னத்துடன் நடத்துவதில் கட்டுப்பாடுகள் காணப்பட்டிருந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மெய்நிகர் மார்க்கங்கள் ஊடாக நடத்தப்பட்ட நிகழ்வுகளிலும் உற்சாகம் நிறைந்த பங்கேற்பு காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.