பல தடவைகள் ஹஜ் நிறைவேற்றியவர்களை இம்முறையும் அரச செலவளில் அழைத்துச் செல்ல நடவடிக்கை

பல தடவைகள் ஹஜ் நிறைவேற்றியவர்களை இம்முறையும் அரச செலவளில் அழைத்துச் செல்ல நடவடிக்கை

புனித ஹஜ் கடமையினை பல தடவைகள் நிறைவேற்றிய சில அரச உத்தியோகத்தர்களை இந்த வருடமும் ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக அழைத்துச் செல்ல அரச ஹஜ் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குறித்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் புத்தசாசன மற்றும்  சமய விவகார அமைச்சிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு திணைக்கள பணிப்பாளரின் சிபாரிசின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவது வழமையாகும்.  

அந்த அடிப்படையில் இந்த வருடமும் நான்கு பேரின் பெயர்கள் புத்தசாசன மற்றும்  சமய விவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பெயர்கள் இத்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி சதுரி பின்டோவின் ஊடாக அனுப்பப்படாமல் ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹீம் அன்சாரினால் நேரடியாக அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு பேர் கடந்த முறை ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்காக சவூதி அரேபியா சென்று ஹஜ் கடமையினை நிறைவேற்றியவர்களாவர்.

இதேவேளை, இந்த திணைக்களத்தில் 15 வருடங்களாக பணியாற்றுகின்ற ஒருவர் மூன்றாவது தடவையாகவும், மூன்று வருடங்களாக கடமையாற்றுகின்ற ஒருவர் இரண்டாவது தடவையாகவும் ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிப்பதற்கான இந்த வருட குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இத்திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
 
பெண் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்க ஒரு பெண் உத்தியோகத்தர் செல்வது வழமையாகும். கடந்த வருடம் போன்று இந்த வருடமும் குறித்த நடைமுறையினை புறக்கணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பெயர்ப் பட்டியலுக்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பலத்த எதிர்ப்பினை அடுத்து, அமைச்சினால் இதுவரை வழங்கப்படவில்லை என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

அத்துடன் ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்கச் செல்வதற்கான உத்தியோகத்தர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்குழுவொன்று அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், திறைசேரியின் உயர் அதிகாரி மற்றும் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்கச் செல்வதற்கு இரண்டு ஆண் உத்தியோகத்தர்களையும் ஒரு பெண் உத்தியோகத்தரையும் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று (29) புதன்கிழமை திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

"நேர்முக பரீட்சை குழுவினால் சிபாரிசு செய்யப்படுபவர்களை மாத்திரமே ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கவனிக்க அனுப்புவேன்" என திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி சதுரி பின்டோ தெரிவித்தார்.

அத்துடன் பெண் ஹஜ் யாத்திரீகர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒரு பெண் உத்தியோகத்தர் இந்த வருடம் கட்டாயம் அனுப்பப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.