விவசாயிகளுக்கு பசளைகள், உரங்கள் மற்றும் பயிற்சிகளை ஐரோப்பிய ஒன்றியமும், FAOஉம் வழங்குகின்றது

விவசாயிகளுக்கு பசளைகள், உரங்கள் மற்றும் பயிற்சிகளை ஐரோப்பிய ஒன்றியமும், FAOஉம் வழங்குகின்றது

இலங்கையில் விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய விவசாயிகளிற்கு பசளைகள், விதைகள் மற்றும் பயிற்சிகளாக 4 மில்லியன் யூரோக்களை (அண்ணளவாக ரூ. 1.5 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது.

இலங்கையில் உள்ள உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் (FAO) இந்த நிதிகள் பயன்படுத்தப்படும். இதற்கான செயற்பாடு கொழும்பில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அண்மைய பொருளாதார நெருக்கடி நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளையும், குறிப்பாக 0.5 ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிரிடும் சிறு விவசாயிகளையும் கடுமையாக பாதித்தது.

உரங்கள் மற்றும் ஏனைய உள்ளீடுகள் இல்லாததால் கடந்த இரண்டு அறுவடை பருவங்களில் கடுமையான பயிர் விளைச்சல் இன்மையால் இந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது அவர்களது வருமானம் குறைவதற்கு வழிவகுத்ததுடன், உணவு உட்பட அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கான திறனையும் பாதித்தது.

ஐரோப்பிய ஒன்றிய தூதர், டெனிஸ் சாய்பி கருத்து தெரிவிக்கையில், "இந்த புதிய திட்டத்தை இன்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலங்கை விவசாயத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கு FAO உடன் நாங்கள் இணைந்தோம்

உரங்கள் மற்றும் விதைகள் போன்ற மிகவும் அத்தியாவசிய உள்ளீடுகளை நாங்கள் ஒன்றாக வழங்குவோம். குறைந்த வளம் கொண்ட நெற்செய்கை முறைகளுக்கு எப்படி மாறுவது என்பது குறித்து விவசாயிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நாம்  பயிற்சி அளிப்போம்.

இந்த புதிய ஆதரவு இலங்கையில் மிகவும் நிலையான, நெகிழக்கூடிய மற்றும் உற்பத்திசார்ந்த விவசாயத் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றத்திற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார். .

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தாராளமான உதவியை நாங்கள் வரவேற்கிறோம், இது உற்பத்தியை அதிகரிக்க அத்தியாவசிய உள்ளீடுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விளைச்சலை அதிகரிக்கும் போது பயன்படுத்தப்படும் உரத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் விவசாயத் துறையானது இரசாயன உரத்தை நம்பியிருக்கும் அளவினையும் குறைக்கும் என இலங்கையில் உள்ள FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன் கூறினார்.

"நாடு முழுவதும் நிலையான நடைமுறையை கடைப்பிடிப்பதற்கான வலுவான வாய்ப்பை இது உருவாக்கும். இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக FAO என்ற முறையில் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களுடன் நாம் நெருக்கமாக பணியாற்றுவோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 0.5 ஹெக்டேர் வரையிலான நிலத்தை பயிரிடும் 41,000 சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உதவும். 2023 பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், அந்த விவசாயிகளுக்கும், அபிவிருத்தி அதிகாரிகளுக்கும் உரத்தை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்துவது, இரசாயன உரத்திற்கான உண்மையான தேவைகளைக் குறைத்தல், கரிம உரங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை இலக்கு வைத்ததாக திறன் அபிவிருத்தி பயிற்சி வழங்கப்படும்.

தற்போதைய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இலங்கையில் விதை நெல் உற்பத்தி முறையை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டமானது விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகளை பயிரிடுவதற்கும், சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை வளர்த்து பதப்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பண்ணைகளை வலுப்படுத்துவதற்கும் உதவும்.