பொதுஜன பெரமுனவில் இணையத் தயாராகும் இஸ்மாயில் எம்.பி?

பொதுஜன பெரமுனவில் இணையத் தயாராகும் இஸ்மாயில் எம்.பி?

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் அம்பாறை மாவட்ட்தில் சம்மாந்துறை தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இவர் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளாது இவர் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீன் கடந்த மாதம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்ட எந்தவொரு கூட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களின் சந்திப்பொன்று பொத்துவிலில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்திலும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் பங்குபற்றவில்லை. இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சரான தினேஷ் குணவர்த்தன கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலின் விசேட அழைப்பினை ஏற்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சம்மாந்துறைக்க விஜயம் செய்து நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.