பொதுத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் 10 ஆசன்ஙகளை கைப்பற்றும்: றிசாத்

பொதுத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் 10 ஆசன்ஙகளை கைப்பற்றும்: றிசாத்

றிப்தி அலி

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 10 ஆசன்ஙகளை கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேசியப் பட்டியல் உள்ளடங்களாக ஐந்து பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ளனர். இதனை இரண்டு மடங்காக்குவதே எமது கட்சியின் அடுத்த இலக்காகும்" என அவர் குறிப்பிட்டார்.   

இதற்கு தேவையான அனைத்து வியூகங்களினையும் தனது கட்சி தற்போது மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கேட்பதா அல்லது தனித்து கேட்பதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்ற பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன், இது தொடர்பில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸுடன் இணைந்து போட்டியிடுவீர்களாக என ஊடகவியலாளர் இதன்போது கேள்வி எழுப்பியதற்கு, "இது தொடர்பில் அக்கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரையும் மேற்கொள்ளவில்லை. எனினும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்பாடத வகையில் அக்கட்சியினர் செயற்படுவார்களாயின், இது தொடர்பில் கலந்துரையாட முடியும்" என முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.