குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையினை பாரியளவில் அபிருத்தி செய்யும் நோக்கில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) ஆலோசனை வழங்கியுள்ளார்.

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் புதிய பிரிவை ஆரம்பித்து பிரதேச நோயாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் குளியாபிட்டிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகள், தற்போதைய நிலை மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்தவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், குருநாகல் மாகாண வைத்தியசாலையை தேசிய அளவில் மேம்படுத்தப்பட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு தேவையான வைத்திய பிரிவு, சிறுவர் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை கொண்ட 14 மாடிகளை கொண்ட கட்டிடத் தொகுதியாக நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப ஒப்புதலை கோர இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்தீர்மானத்திற்கமைய சில மாதக் காலங்களுக்குள் இந்த கட்டிடத் தொகுதியின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த  சந்திப்பில் சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா தேவி வன்னிஆராச்சி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, D.B.ஹேரத், சீதா அரம்பேபொல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாபா, ஜயரத்ன ஹேரத், சாந்த பண்டார, சுமித் உடுகும்புர, அசங்க நவரத்ன, P.Y.G.ரத்னசேகர, சமன்பிரிய ஹேரத், சரித ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய, வடமேல் மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் இந்திக ரத்நாயக்க, குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த, வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளர் கமல் அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் அபிருத்திகள் குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே பிரதமர் தலைமையில் இன்று கூட்டம் இடம்பெற்று விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.