கிழக்கு பள்ளிவாசல் சம்மேளனம்: யாரை ஏமாற்ற?

கிழக்கு பள்ளிவாசல் சம்மேளனம்: யாரை ஏமாற்ற?

றிப்தி அலி

இலங்கை வாழ் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு பல சிவில் அமைப்புக்கள் அவ்வப்போது தோற்றுவிக்கப்படுவது வழக்கம். எனினும், இந்த  அமைப்புக்களின் ஆயுட்காலம்தான் மிகக் குறுகியது.

இந்த அமைப்புக்களினால் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பது பாரிய கேள்விக்குரியாகும். இவ்வாறான நிலையிலேயே 'கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனம்' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன விடயத்தினை சமூக ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது.

சுமார் 35 வருட கால வரலாற்றினைக் கொண்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் தலைமையிலேயே இந்த சம்மேளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறிப்பிட்ட அளவிலான திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறானதொரு கிழக்கு மாகாண  முஸ்லிம்  சம்மேளன கூட்டமைப்பு இதற்கு முன்னரும் இதே சம்மேளன மண்டபத்தில் பல தடவைகள் கூடியுள்ளது. ஏதேனும் ஒரு விவகாரம் பேசுபொருளாகும் போது இவ்வாறு கூடுவதும் பின்னர் கலைந்து போவதுமே தொடர் கதையாகியுள்ளது.

இந்த வாரமும் இவ்வாறு கூடி புதிதாக சம்மேளனம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டது போன்ற செய்திகள் வெளியாகியிருப்பதன் மர்மம் என்ன என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.

இந்த சம்மேளனத்தின் தலைவர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், செயலாளர் பதவி அம்பாறை மாவட்டத்திற்கும், பொருளாளர் பதவி திருகோணமலை மாவட்டத்திற்கும் வழங்க இந்தக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கிழக்கு முஸ்லிம்களை புறக்கணித்துவிட்டு எடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான எந்த  தீர்வினையும் ஏற்றுக்கொள்ளவதில்லை என்ற தீர்மானம் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இனப்பிரச்சினைக்கான தீர்வுப்  பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களினதும் சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குள் முஸ்லிம் மக்களுக்கான தீர்வுத்திட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவும் இந்த சம்மேளனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற கதையாடல் சூடுபிடித்துள்ளது. இதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று உண்மையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சி அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

உதாரணமாக யுத்தக் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கல், காணிகளை வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் இதில் முக்கியமானவை.

அடுத்த முகம்தான், மேற்படி விவகாரங்களை உரிய இடங்களில் பேசித் தீர்க்காது மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கி ஒற்றுமையாக வாழும் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளைத் தோற்றுவித்து அரசியல் இலாபங்களை பெறும் நோக்கமாகும்.

இவ்வாறான நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் பின்னணியில் தான் கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தற்போது ஏற்படுகின்றது.

காரணம், கடந்த பல வருடங்களாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிய போது வாய்மூடி மெனியாக இருந்தவர்கள் இன்று கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனம் என்ற போர்வையில் வெளிக் கிளம்பியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலப் பகுதியில் ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காதி நீதிமன்ற முறையினை இல்லாமலாக்க முயற்சி, ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பின்னரான பல்வேறு நெருக்குவாரங்கள்  எனப் பல இன்னல்களை இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கினர்.

இச்சமயத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டமைப்பு ரீதியான எந்தவொரு அமைப்பும் உருவாக்கப்படவில்லை.

அது மாத்திரமல்லாமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவுகள் இன்னமும் ஆவணப்படுத்தப்படவில்லை. அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இத்தாக்குதலை மையப்படுத்தி கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பதற்கோ, அவர்களுக்காக குரல் கொடுப்பதற்கோ இந்த சம்மேளனம் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை.

அத்துடன் முஸ்லிம்களின் யுத்த அழிவு, அபகரிப்பு தொடர்பாக ஆவண ரிதியான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இதுவரை செய்யவில்லை.

இவ்வாறான நிலையில், தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கால கட்டத்தில் திடீரென கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனம் உருவாக்கப்பட்டு இனப்பிரச்சினை தொடர்பிலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளன உருவாக்கத்தின் பின்னணியில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸா எரிப்பிற்கு அங்கீகாரம் வழங்கிய சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் அறிய முடிகின்றது.  

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பொது வெளியில் முகங்காட்ட அச்சப்படுகின்ற நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தின் ஊடாக மக்கள் மத்தியில் நுழைய முயற்சிக்கின்றனர்.

இது போன்றே, கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பள்ளிவாசல் சம்மேளனத்தினால் கல்முனையில் நிறைவேற்றப்பட்ட மூதூர் பிரகடணத்தின் பின்னணியிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவர் செயற்பட்டதை இங்கு ஞர்பகமூட்ட விரும்புகின்றேன்.

இந்த சம்மேளனம் தீடிரென உருவாக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டு வினவிய போது, "அம்பாறை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் சார்பாக மௌலவியொருவரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது" என்றனர்.

எனினும், அம்பாறை மாவட்டத்தில் பள்ளிவாசல் சம்மேளனம் என்ற அமைப்பொன்றில்லை. ஆனால் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்ற அமைப்பொன்று முன்னர் செயற்பட்டது.

எனினும், கடந்த பல வருடங்களாக செயழிந்து காணப்பட்ட இந்த அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூடி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. இதன் தொடராகவே இக்கூட்டம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இது போன்ற அமைப்புக்கள் நல்ல நோக்கில் உருவாக்கப்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும். மாறாக, சில அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்க காலத்திற்கு காலம் தோற்றம் பெறுவதும் பின்னர் காணாமல் போவதையுமே இங்கு விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலை மாறி, அரசியல் பின்புலமற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை கேள்விக்குட்படுத்தக் கூடிய மக்களின் சகல பிரச்சினைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுக்கக் கூடிய ஒரு சம்மேளனமே காலத்தின் தேவையாகவுள்ளது.