குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்சனுக்கு வழங்கத் தீர்மானம்

குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்சனுக்கு வழங்கத் தீர்மானம்

றிப்தி அலி

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் நிதியுதவில் மேற்கொள்ளப்படவுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்;ஷன் எனும் தனியார் கம்பனிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த மே 26ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதிக் கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் சுமார் 151.3 கிலோ மீற்றர் நீளமான பதுளை – செங்கலடி வீதியின் புனரமைப்பு பணிகளுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலினை அபிவிருத்திக்கான சவூதி நிதியம் நீண்ட கால கடனுதவியாக வழங்கியிருந்தது.

இந்த கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் ஊடாக கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தினை புனரமைப்பு செய்ய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்திருந்தது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியின் சிபாரிசிற்கமைய அபிவிருத்திக்கான சவூதி நிதியம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதனையடுத்து குறித்த பால புனரமைப்பு பணிகளுக்காக அமைச்சினால் விலைமனுக் கோரப்பட்ட போது ஒன்பது விலைமனுக் கோரல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்;ஷன் எனும் தனியார் கம்பனிக்கு குறித்த பால புனரமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சுமார் 100 மீற்றர் நீளமான இப்பாலத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வீ.வீ. கருணாரத்ன ரூ கம்பனியிடம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட்டிருந்தது.

இப்பால நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்ற நிலையில் பாலத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதனால், ஆரம்பிக்கப்பட்ட படகு பாதை சேவையில் பயணித்த எட்டுப் பேர் கடந்த 2021.11.23ஆம் திகதி உயிரிழந்தனர். இதனையடுத்து இப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.