கஃபேயினால் நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகள்

கஃபேயினால் நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகள்

சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது அமைப்புக்கு இதுவரை 435 முறைபாடுகள் பதிவாகி உள்ளன. இம்முறைபாடுகளில் அதிகளவான முறைபாடுகள் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலே பதிவாகி உள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல் விடுக்கபட்ட தினத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்கின்ற தினம் வரைக்கும் பதிவாகியுள்ள முறைபாடுகளில் அதிகளவான முறைபாடுகள் அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பிலே பதிவாகி இருந்தது.

ஆனாலும் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னரிலிருந்து இதுவரையான காலப்பகுதிகுள் கஃபே அமைப்புக்கு பதிவாகியுள்ள முறைபாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பாகவே பதிவாகி உள்ளன.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கஃபே அமைப்பு,  25 மாவட்டகளிலும் 25 மாவட்ட இணைப்பாளர்கள் அதேப்போன்று,160 நீண்டகால கண்காணிப்பாளர்களை நிறுவி தேர்தலுக்கு முன்னரான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருகின்றது.

அதேபோன்று தேர்தல் பிரச்சார நிதியினை கண்காணிப்பதற்காக 40 தேர்தல் தொகுதிகளில் 40 நீண்ட கால கண்காணிப்பாளர்களை நிறுவி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் செலவு செய்கின்ற செலவு தொடர்பிலான கண்காணிப்பினை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரக்கூடிய செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல் தினத்தில் தேர்தல் தின கண்காணிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் 3,500 தேர்தல் தின கண்காணிப்பாளர்களை நிறுவி அதன் ஊடாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கஃபே அமைப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது" என்றார்.