'தேர்தல் முடிந்தவுடன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம்'

'தேர்தல் முடிந்தவுடன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு  வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம்'

பொதுத் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

திருகோணமலை சேருவாவில பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

"தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், தேர்தலின் பின்னர் அது உடனடியாக செயற்படுத்தப்படும்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அமைய இன பேதமின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கும், அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நபர்களின் தேவை தற்போது நாட்டில் காணப்படுகிறது.

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் விவசாயத்துறை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி விசேட வேலைத்திட்டங்கள் பலவற்றை செயற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஓய்வூதியம் மற்றும் விவசாய காப்புறுதி என்பவற்றை மேலும் மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக திருகோணமலை என்பது இலங்கைக்கு அவசியமான மொத்த பால் உற்பத்தியில் 70 முதல் 80 வீதத்தை வழங்கக் கூடிய மாவட்டம் என்பது தனது நம்பிக்கை என்றும், பால் உற்பத்தி தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தவும், மாடுகளுக்கு தேவையான புல்வெளிகளை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு உடனடியாக புதிய முதலீட்டாளர்களை கொண்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்வதுடன், அவ்வாறு இன்றேல் அரசாங்கத்தின் தலையீட்டுடன் அதனை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.