அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான  மீன் இனங்கள் விற்பனை

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான  மீன் இனங்கள் விற்பனை

பாறுக் சிஹான்

அம்பாறை மாவட்டத்தில்   மாரி கால பருவ மழை  ஆரம்பித்துள்ளமையினால் அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே  இன்று வடிந்தோடும் வெள்ள நீரில் அதிகளவானோர் சிறு மீன் முதல் பெரிய மீன்களை அத்தாங்கு மற்றும் எறி வலை மூலம் பிடிக்கின்றனர். 

இவ்வாறு அதிகமாக பிடிக்கப்படும் மீன்களை  சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன்  மக்கள் ஆர்வமாக  கொள்வனவு செய்வதை காண முடிகிறது.தற்போது பெய்யும் மழை காரணமாக  நன்னீர் மீன்  பிடி   கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில்  கோல்டன் செப்பலி, கணையான், கொய், கொடுவா, கெண்டை, விரால், சுங்கான், விலாங்கு ,பொட்டியான், சுங்கான், கொறட்ட, கனயான், வெள்ளையாபொடி மற்றும்  கொக்கிச்சான்   போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) , பனையான், மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்றன. இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர். 

இதே வேளை கடற்கரை பகுதிகளிலும் அதிகளவான மீன்கள் கரைவலையில் பிடிக்கப்படுகின்றன.

குறிப்பாக கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, இமாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் பகுதிகளில் கீரி, நெத்தலி உள்ளிட்ட மீன்களும் பிடிபடுவதுடன் மலிவு விலையில் மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.