சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடு தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவு

சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடு  தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவு

சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடு தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டாரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கமொன்றின் பொறுப்பு என்பதால் இது தொடர்பாக வெகு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தில் பந்தரா பாதுஸ் வகையை சேர்ந்த ஏழு வயதுடைய சிறுத்தையொன்று வில்லில் சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதுடன், பிரதமரினால் மேலே குறிப்பிடப்பட்ட ஆலோசனை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், அதன் எதிரொலியாக மிகவும் அரிய வகையிலான கறுப்பு சிறுத்தையொன்றை நாடு இழந்தமையை சுட்டிக்காட்டிய பிரதமர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை விழிப்பூட்டி மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதிருக்கும் வகையில் செயற்படுமாறும், வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.