நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (06) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

"கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 20-29 வயதுக்குட்பட்டோருக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை (06) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் அதே இடங்களிலேயே குறித்த தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகின்ற இடங்களுக்கு மேலதிகமாக விகாரமகாதேவி பூங்கா, தியத உயன, பனாகொடை இராணுவ படை முகாம் மற்றும் வேரஹெர இராணுவ மருத்துவ படையணி தலைமையகம் ஆகிய இடங்களில் 20-29 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நாளை ஆரம்பிக்கப்படுகின்ற திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி செலுத்தப்படும்" என்றார்.