புற்றுநோய்: அச்சப்படாதீர்; அவதானமாக இருங்கள்

புற்றுநோய்: அச்சப்படாதீர்; அவதானமாக இருங்கள்

றிப்தி அலி

தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பூகோள மயமாக்கம் காரணமாக முழு உலகமும் இன்று சுருங்கிக் காணப்படுகின்றது.  இதனால் மனிதர்களின் உணவு பழக்கத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. தொற்று நோய், தொற்றா நோய் என இவை இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

தொற்று நோய் என்றால் பொதுமக்களின் மனதில் ஒரு பீதி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதனாலேயே உலகளாவிய ரீதியில் தற்போது பரவிக்கொண்டிருக்கும்  கொவிட் - 19 நோய்க்கு மக்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

இது போன்ற முக்கியத்துவம், நீரழிவு, உயர் குருதி அமுக்கம், அதிக கொலஸ்ரோல், புற்று நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியான சிகிச்சைகள் மூலம் தொற்றா  நோய்களை குணப்படுத்த முடியும் என மக்கள் நினைப்பதும் இதற்கான காரணமாகும்.

எனினும் புற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மிக அரிதாக காணப்பட்ட இந்த நோயின் வளர்ச்சி வீதம் தற்போது அதிகமாக காணப்படுகின்றது.

"ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம், புகைப்பிடித்தல், காற்று மாசடைவு, மதுபானம் அருந்தல் மற்றும் வெற்றிலை மெல்லுதல் போன்றன இந்த நோய்கான பிரதனமான காரணமாகும்" என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளரான வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

"எமது நாட்டில் புற்று நோய் காரணமாக தினமும் 38 மரணங்கள் இடம்பெறுவதுடன் 64 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்" என அவர் குறிப்பிட்டார்.

"எவ்வாறாயினும், இந்த நோயினை ஆரம்பத்தில் அடையாளம் காண்பதன் ஊடாக குணப்படுத்தி உயிரை பாதுகாக்க முடியும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களின் பிரகாரம் 2018ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் புற்று நோய்க்குள்ளான 23,503 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த ஆண்டில் புற்று நோய் காரணமாக 14,013 இறந்துள்ளனர்.

இதில் 22 சதவீதமானவர்கள் புகையிலை பாவனை காரணமாக உயிரிழந்துள்ளனர். 2008ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வைத்தியசாலைகளில் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்ட அலுவலகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதற்காக அம்பாறை மாவட்ட தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, திருகோணமலை மாவட்ட தேசிய வைத்தியசாலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலை என நாடளாவிய ரீதியில் 23 வைத்தியசாலைகளில் புற்று நோய் சிகிச்சை நிலையங்களும், 1,000க்கு மேற்பட்ட cancer screening centersகளும் காணப்படுகின்றன.

வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோயாக இது காணப்படுகின்றது. எனினும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த நோயின் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் ஊடலின் அனைத்து பகுதியினையும் விரைவில் தாக்கக் கூடியதாகும் என்பதால் ஆரம்பத்தில் அடையாளம் காண வேண்டும். "எவ்வாறாயினும் முன்றிலொரு வீதமான புற்று நோய்களை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் முற்றாக குணப்படுத்த முடியும்" என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளரான வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

•    நீண்ட நாளைக்கு இருமல் அல்லது சலியுடன் குருதி வெளியேறல்
•    குரலில் வித்தியாசம் அல்லது கரகரப்பு
•  சிறு கட்டி, மச்சம் அல்லது பாலுண்ணியில் ஏற்படும் தீடிர் வித்தியாசம அல்ல விரைவான வளர்ச்சி
•    மார்பில் அல்லது வேறு இடங்களில் ஏற்படும் சிறுகட்டி அல்லது தடிப்பு
•    பெண்களின் யோனி வழியூடாக அசாதாரனமான கசிவு அல்லது குருதி பெருக்கு
•   மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் வழக்கத்தில் மாற்றம் அல்லது அதனுடன் குருதி கலந்து வெளியேறுதல்
•  நீண்ட நாட்களாக உணவு சமிபாடடையாத தன்மை அல்லது விழுங்குவதில் சிரமத்தன்மை
•    வாயில் வெள்ளை அல்லது சிவப்பு நிறமான தழும்பு அல்லது ஒரு பிரதேசம் வீங்க வெளித் தள்ளியிருத்தல்
•    கழுத்து அல்லது தைரொயிட் சுரப்பி வீங்கியிருத்தல்
•    திண்ம ஆகாரம் அல்லது நீராகாரம் விழுங்குவதில் கஷ்டம்
•    நீண்ட நாட்களுக்கு ஆறாத புண்கள்

'மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஒரு நபருக்கு மூன்று கிழமைக்கு மேல் காணப்பட்டால் அது புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இதனால் உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெறவும் வேண்டும்' என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 600 வகையான புற்று நோய்கள் காணப்படுகின்றன. எனினும் எமது நாட்டில் பின்வரும் புற்று நோய்களே அதிகம் காணப்படுகின்றன. அவையாவன: 

1.    வாய்ப் புற்று நோய்
2.    உணவுக் கால்வாய் புற்று நோய்
3.    பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய்
4.    மர்பகப் புற்று நோய்
5.    கருப்பை கழுத்துப் புற்று நோய்
6.    புரொஸ்டேட் சுரப்பில் புற்று நோய் (சுக்கிலச் சுரப்பி)
7.    கேடயப் போலிச் சுரப்பிப் புற்று நோய் (தைரொயிட்)
8.    குரல்வளைப் புற்று நோய்
9.    சுவாசப்பை புற்று நோய்
10.    சிறுநீரகப் புற்று நோய்
11.    இரத்தப் புற்று நோய்

இதில் வாய்ப் புற்று நோய் ஆண்களுக்கே அதிகம் காணப்படுகின்றது.  வெற்றிலை சாப்பிடுதல், மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல்,  பாக்கு மற்றும் பாக்குத் தூள் மெல்லுதல் போன்றனவே இந்த நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும். அத்துடன் சுகாதாரமான முறையில் வாயினைப் பேணாமையும் ஒரு பாரிய குறைபாடாகும்.

இதனால் சுய வாய்ப் பரிசோதனையினை மாதத்திற்கு ஒரு தடவை மேற்கொள்ளவதுடன், வருடத்தில் ஒரு தடவை பல் வைத்தியரைக் கொண்டு வாயினை பரிசோதனை செய்ய வேண்டும்.

அத்துடன் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோயும் ஆண்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இதேவேளை, "புற்று நோய் அடையாளம் காணப்பட்ட பெண்களில் 27 சதவீதமானோருக்கு மார்பகப் புற்று நோயும், 12 சதவீதமானோருக்கு தைரோயிட் எனப்படும் கேடயப் போலிச் சுரப்பிப் புற்று நோயும் ஒன்பது சதவீதமானோருக்கு பெருங்குடல் மற்றும் மலக் குடல் புற்று நோயும் காணப்படுவதாக" வைத்திய கலாநிதி  ஜானகி விதானபத்திரன கூறுகின்றார்.

புற்று நோயினை கட்டுப்படுத்துவதற்காக அதிகம் மரக்கறிகள் மற்றும் புழங்களை உண்ண வேண்டும். அதேபான்று முறையான வாழ்க்கை முறையினை கடைப்பிடிப்பதுடன், BMI என அழைக்கப்படும் உடற் பருமண் சுட்டியினை சரியாக பேண வேண்டும்.

இதற்கு மேலதிகமாக தொடர்ந்து உடற் பயிற்சி மேற்கொள்வதுடன் புகைப்படித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவற்றினை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது மாத்திரமல்லாமல் புகைப்படிப்பவர்களுக்கு அருகில் இருப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

அதாவது, புகைப்படிப்பவர்களின் புகையினை சுவாசிப்பதன் ஊடாகவும் புற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகும். புகையிலை பாவனை  15 வகையான புற்றுநோய்களை ஏற்படுத்துகின்றது. இதிலுள்ள 7,000 இரசாயனங்களில் 70 இரசாயனங்கள் நேரடியாக புற்று நோயினை தோற்றுவிக்கக்கூடியன.

இந்த நோய் தொடர்பான பல்வேறு செயற்திட்டங்களை தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினால் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக புற்றுநோயினை ஆரம்பத்தில் கண்டறிவதற்கான மையமொன்று நாரஹேண்பிட்டியில் பொதுச் சுகாதார கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ளது.

இந்த மையம் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்திருக்கும். இங்கு புற்று நோய்க்கு தேவையான அனைத்து சேவைகள் மற்றும் பரிசோதனைகள் ஆகியன இலவசமாக வழங்கப்படுகின்றன.

இங்குள்ள வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை cedc.nccp@gmail.com எனும் மின்னஞ்சல் அல்லது +94113259227 எனும் தொலைபேசி இலக்கத்தின் வழியாக முன்பதிவினை மேற்கொள்ள முடியும். இந்த மையத்தினை மாகாண மட்டத்தில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையினை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, "மார்கப் புற்று நோய் தற்போது பெண்கள் மத்தியில் அதிகம் பரவுகின்றது. ஏறத்தாழ வருடாந்தம் 3,000 - 3,500 வரையான மார்கப் புற்று நோயாளர்கள் புதிதாக கண்டறியப்படுவதாக" தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் புற்று நோய் தடுப்பு மற்றம் ஆரம்ப கண்டறிதல் பிரிவின் பொறுப்பதிகாரியான வைத்தியர் நயான டி அல்விஸ் தெரிவித்தார்.

"பெண்களின் மார்பகங்களில் வழமைக்கு மாற்றமாக அவதானிக்கக்கூடிய மாற்றங்கள் காணப்படின் உடனடியாக பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று பரிசோதிக்குமாறு" வைத்திய கலாநிதி நயான டி அல்விஸ் குறிப்பிட்டார்.

"இந்த மார்பக புற்று நோய் பெண்களுக்கு மாத்திரம் ஏற்படுவதில்லை. ஆண்களையும் தாக்கக் கூடியதொன்றாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் நோக்கிலேயே மார்ப்பக புற்று நோய் மாதம் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபரில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டில் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினால் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக சமூக ஊடகங்களில் மூலமான பிரச்சாரமும் ஏற்பாடு செய்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள், உளவள ஆலோசனைகள் மற்றும் ஆன்மீக ஆலோசனைகள் போன்ற பல்வேறு சேவைகளை அரசாங்கம் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களினால் தற்போது இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் இந்த நோயினை ஆரம்பத்தில் அடையாளம் காண்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்பதன் காரணமாக யாரும் இந்த நோயினை கண்டு அஞ்சி ஒடி ஒழியத் தேவையில்லை. அத்துடன் சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டிய தேவையுமில்லை.  

புற்று நோய் விதியின் விளையாட்டல்ல. எங்களது அன்றாட செயற்பாடுகளில் நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டு புற்று நோய் ஏற்படுவதை தவிர்ப்போம்.