இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) - 2022/23 அங்குராப்பணம்

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) - 2022/23 அங்குராப்பணம்

இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரச்சாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது “கோவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. நேர்மையான அரச ஊழியர் என கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.  இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது 0711295295/0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.