பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கல்

பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கல்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று (கிரி அம்மா தானய) இன்று (18) முற்பகல் நாராஹேன்பிட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இம்முறை 18ஆவது தடவையாக இந்த தாய்மார்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெறும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், மரியாதைக்குரிய மஹா சங்கத்தினரின் ஜய பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக்  கொண்டார். 

அதனை தொடர்ந்து 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கப்பட்டது.

இதன்போது, கொலொன்னாவ இந்து பெரேரா அம்மையாரினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆசீ வேண்டி அம்மனுக்கு பூஜிக்கப்பட்டது.

பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களினால்  நினைவு பரிசொன்றும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதமர் மற்றும் அவரது பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிகழ்வில் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, பவித்ரா வன்னிஆராச்சி, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, சிறிபால கம்லத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.