கல்முனை மாநகர சபையும் social distanceஉம்

கல்முனை மாநகர சபையும் social distanceஉம்

கொரோனா வைரஸ் பரவுதற்கு முகமூடி அணிதல் மட்டும் போதுமானதல்ல என உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் நீங்கள் வெளியே செல்வதாயின் குறைந்தளவு பாதுகாப்பு தூரமான ஒரு மீற்றரை ஏனையவர்களிடமிருந்து பேணுங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் கல்முனை மாநகர சபையில் இன்று (25) புதன்கிழமை இடம்பெற்ற கொரொணா அனர்த்த செயலணியின் உயர் மட்டக் கூட்டத்தில் social distance பேணப்படவில்லை.

கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்,  பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நாட்டில் ஊரடங்கு சட்டத்தை தளர்தினாலும் மக்கள் பாதுகாப்பு கருதி கல்முனை வர்த்தக நிலையம், பொதுச் சந்தை ஆகியவற்றினை நாளை (26) திறப்பதில்லை என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம், நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானம், மருதமுனை மசூர் மௌலான விளையாட்டு மைதானம், சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானம் மற்றும் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய மைதானம் ஆகியவற்றில் சில்லறை வியாபாரம் மற்றும் மரக்கறி வியாபாரங்களை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் ஒன்று கூடல் செறிவைக் கட்டுப்படுத்தலான என இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனவர்கள் தெரிவித்தனர். மக்களுக்கு கொரோனா தொடர்பில் அறிவுறுத்தல் வழங்குவதற்கு முன்னர், அது தொடர்பில் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் முன்ணுதாரனமாக செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும்.

அரச அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கல்முனையின் முதற் பிரஜையான தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் social distance பேணப்படாத நிலையில், கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் வாழும் பொதுமக்களிடம் மாத்திரம்  எவ்வாறு social distance பேணுவது தொடர்பில் எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் மாநாட்டில் social distance பேணப்பட்டமை முக்கிய விடயமாகும். அதேபோன்று நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலும், social distance பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த social distance விடயம் சுட்டிக்காட்டப்பட்ட போது, "இடம்போதமையே நெருக்கடிக்கான காரணம் என மேயர் தரப்பினரால் அறிவிக்கப்பட்டதுடன் அடுத்த கூட்டத்தில் இது சரி செய்யப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதாக" கூட்டத்தில் கலந்துகொண்ட கல்முனை வர்த்தக சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை தற்போது கல்முனை பொது நூலக வளாகத்தில் தற்காலிகமாக இடம்பெறுகின்றமையினால் இடப்பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாகும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமையினால் கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையிலுள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலுள்ள கேட்போர்கூடத்தில் இந்த கூட்டத்தினை நடத்தி social distanceயினை பேணியிருக்க முடியும்.