பாகிஸ்தானிற்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்ட பெளத்த பிக்குகள் நாடு திரும்பல்

பாகிஸ்தானிற்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்ட பெளத்த பிக்குகள் நாடு திரும்பல்

கடந்த ஏப்ரல் 19 முதல் 26 வரை பாகிஸ்தானுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை மீண்டும் நாடு திரும்பினர்.

இத்தூதுக்குழுவை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக் மற்றும்  பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர்  அதிகாரிகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தது வரவேற்றனர்.

இதன்போது கருத்துத்தெரிவித்த உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக்,  "வெற்றிகரமான இச்சுற்றுப்பயணத்தை கொழும்பிலுள்ள  பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்து என்றும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புத்த மத சுற்றுலா முயற்சிகள்  மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மக்கள் தொடர்புகள் மேம்படும் என்றும் குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முன்வந்த  மதிப்புமிக்க பெளத்த பிக்குகளுக்கும், அதற்காக வசதிவாய்ப்புக்களை செய்து கொடுத்த  இலங்கை அரசாங்கத்திற்கும் உயர் ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பிரிவு மற்றும் இஸ்லாமாபாத்தின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் பங்களிப்பையும் அவர் மிகவும் பாராட்டினார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  பெளத்த பிக்குக்களுடனான சந்திப்பானது,  இலங்கையுடனான பாகிஸ்தான் தலைமை மற்றும் மக்களின் வலுவான இருதரப்பு உறவுகளையும் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தூதுக்குழு சார்பாக, கங்காராமய விகாரை  தலைமை பதவியில் உள்ள மதிப்புக்குரிய கலாநிதி கிரிந்த அசாஜி தேரர் கருத்துத்தெரிவிக்கையில், பாகிஸ்தான் பிரதமருக்கும், பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற பெளத்த பாரம்பரியத்தையும் நினைவுச் சின்னங்களையும் பார்வையிட வாய்ப்பை வழங்கிய இச்சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்வதில் மகத்தான ஆதரவை வழங்குவதில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கும் நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானிய அதிகாரிகள், தூதுக்குழுவின் செளகரியம்  மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததோடு, பாகிஸ்தானில் பெளத்த யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்த  கருத்துகள் மற்றும் பரிந்துரைகளிலும் ஆர்வமாக ஈடுபட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் பெளத்த சுற்றுலாவை மேம்படுத்திடுவதற்கான பாகிஸ்தான் அரசாங்கத்தின் திட்டத்தை  இலங்கை தரப்பில் இருந்து ஒருங்கிணைப்பு செய்த கலாநிதி அசெலா விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் திட்டத்தின் விளைவாக பாகிஸ்தானின் புத்த பாரம்பரியத்தை தரிசிப்பதற்காக  11 மூத்த பெளத்த பிக்குகள் அடங்கிய குழுவின் விஜயத்தை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது என்றும்  இம்முயற்சிக்கு பாகிஸ்தான் அரசுக்கும், உயர் ஸ்தானிகராலயத்திற்கும்  மற்றும் பாகிஸ்தானிய மக்களின்   அற்புதமான விருந்தோம்பல் குணத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய குடிமக்கள் மற்ற மதங்கள் மீது வைத்திருக்கும் மரியாதையையும், பெளத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையையும்காண முடிந்தது என்றும்  அவர் மேலும் கூறினார்.

மேலும், இந்த விஜயத்தின் மூலம், எதிர்காலத்தில் இலங்கையர்கள் பாகிஸ்தானுக்கு பெளத்த யாத்திரிகை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்  கூறியமை குறிப்பிடத்தக்கது.