பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்படும் அல்லது கைவிடப்படும்: நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்படும்   அல்லது கைவிடப்படும்: நீதி அமைச்சர்

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் அராப் நியூசிற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும் அது நிறைவேற்றப்படவில்லை. 1979ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம் நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும், சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மூன்று மாதம் முதல் 18 மாத காலம் வரையில் நபர் ஒருவரை தடுத்துவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கலாம்.

எனினும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மாற்றங்களிற்கு உட்படுத்தப்படும் அல்லது கைவிடப்படும். இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நிபுணர்கள் குழுவொன்றையும் அமைச்சரவை நியமித்துள்ளது.

இந்த இரு குழுக்களின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே இது குறித்து தீர்மானிக்கப்படும். இந்த குழுக்கள் மூன்று மாதங்களிற்குள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.

மார்ச் மாதம் செய்யப்பட்ட திருத்தங்கள் மத, இன, சமூக ஐக்கியமின்மையை ஏற்படுத்தியவர் அல்லது ஏற்படுத்த முயன்றார் என சந்தேகிக்கப்படுபவரை அவர் சரணடைந்தால் அல்லது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் இரண்டு வருடங்கள் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்துவைப்பதற்கு அனுமதியளித்தன.

கடந்த ஜூன் 8ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகள் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீறுவதால் அதனை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

இலங்கையை பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வேண்டுகோள் விடுத்த ஐரோப்பிய பாராளுமன்றம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இரத்துச்செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தது.

இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பற்ற விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.