இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் அல்-ஸனூஸி காலமானார்

இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் அல்-ஸனூஸி காலமானார்

பாரூக் பதீன்
ஆசிரியர் & வலய சுற்றாடல் ஆணையாளர்
புத்தளம்

இலங்கையின் நண்பர், மனிதாபிமானத் தந்தை இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர், மனிதாபிமானத் தந்தை அப்துல்லாஹ் அல்-ஸனூஸி 01 ஜுன் 2022 புதன்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன் .

2004ஆம் ஆண்டின் மிகப் பெரிய இயற்கை அழிவாகக் கருதப்படும் ஆழிப்பேரலையின் அனர்த்தங்களின் போது அன்றைய இலங்கைக்கான குவைத் தூதுவராக மர்ஹும் அல்-ஸனூஸி கடமையில் இருந்தார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரண உதவிகளின் போது அவர் மனிதாபிமான உதவிகளின் முன்னோடியாக திகழ்ந்தார்கள். இலங்க - குவைத் நட்புறவு என்பது 50 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பமனாது. இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1971 பெப்ரவரி 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது.

1995ஆம் ஆண்டு இலங்கையில் குவைத் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைக்கான மூன்றாவது குவைத் தூதுவராக அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி 2002ஆம் ஆண்டு நியமனம் பெற்று 2005 வரை சேவையில் இருந்தார்.

அவருடைய பணிக்காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. அன்று தொடக்கம் தனது சேவைக்காலம் முடியும் வரை வழமையான இரு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவதற்கு அப்பால் இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கூடிய கரிசனை செலுத்தி வந்தார்.

மர்ஹும் அப்துல்லாஹ் அல்-ஸனூஸி, இலங்கை வாழ் மக்களின் உள்ளங்களை வென்றவர். அவருடைய காலத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்படப்ட இலங்கை மக்களின் துயரங்களை நீக்குவதில் மிகுநந்த கரிசனையோடு அருஞ்சேவை செய்தவர்.

மேலும் புத்தளம் குவைத் வைத்தியசாலை, குவைத் சிற்றி, வீடமைப்பத் தொகுதி, நூற்றுக்குமதிகமான மீனவர்களுக்கு படகுகள், வள்ளங்கள்,  இயந்திரங்கள், வலைகள், அநாதைகள் பிள்ளைகளுக்கான மாதாமாதம்  சகாய நிதி வழங்கியமை கல்விக்கூடங்கள், பாடசாலைகள், மத்ரஸாக்கள் பள்ளிவாசல்கள், வைத்தியசாலைகள்   அவற்றுக்கான ஏனைய உபகரணங்கள் நிவாரணங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளின் தந்தையாக மதிக்கப்பட்டவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பணிகளை ஏற்று சிறந்த கூலியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றோம். அண்மைக் காலமாக சுகயீனமுற்றிருந்த முன்னாள் தூவர் ஸனூஸி அவர்கள் நேற்று புதன்கிழமை மரணித்தார்கள்.

அவருடைய ஜனாஸா கடந்த 02 ஜுன் 2022 வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

யா அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து அவருக்கு அருள்புரிவாயாக! அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் பொறுமையையும் வழங்குவாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்