குழப்பத்தில் பங்களாதேஷ்

குழப்பத்தில் பங்களாதேஷ்

பிரிட்னி மார்டில்

வியத்தகு முறையில் அதிகரித்த அமைதியின்மையில், பங்களாதேஷ் மாணவர்கள் அரச தொலைக்காட்சியான பங்களாதேஷ் தொலைக்காட்சியை (BTV) குறிவைத்து, அதன் வரவேற்பு கட்டிடம் மற்றும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த வன்முறையானது நாட்டின் சிவில் சேவை பணியமர்த்தல் விதிகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களின் குறிப்பிடத்தக்க தீவிரத்தை குறிப்பதுடன், இறப்பு எண்ணிக்கை இப்போது குறைந்தபட்சம் 39 ஐ எட்டியுள்ளது.

நெருக்கடியானது போராட்ட அமைப்பு மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான முக்கியமான கருவிகளான சமூக ஊடகங்களைத் தடுக்கவும் கைத்தொலைபேசி தரவு சேவைகளைக் கட்டுப்படுத்தவுமான முன்னய முயற்சிகளைத் தொடர்ந்து "near-total" இணைய முடக்கம் என விபரிக்கப்படும் இணையத்தை தடை செய்ய அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.

வாரக் கணக்கில் நீடித்து வரும் போராட்டங்கள், 1971 பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரில் இருந்து வந்த வீரர்களின் வழித்தோன்றல்கள் உட்பட குறிப்பிட்ட குழுக்களுக்கு சிவில் சேவைப் பணிகளில் கணிசமான பகுதியை ஒதுக்குகின்ற ஒதுக்கீட்டு முறையை மையமாகக் கொண்டதாகும்.

2009ல் இருந்து ஆட்சியில் இருந்த பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இந்த முறைமை பாராபட்சமாக பலனளிக்கிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இந்த அமைதியின்மை ஹசீனாவின் எதேச்சதிகார ஆட்சியின் மீதான பரந்த அதிருப்தியையும் அவரது நிர்வாகத்தை நிலைநிறுத்துவதற்கும் கருத்து வேறுபாட்டை அடக்குவதற்கும் அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் பிரதிபலிக்கிறது.

முன்னைய நாளில் தேசிய உரையில் நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக உரையாற்றிய பிரதமர் ஹசீனாவின் முயற்சி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தணிக்கத் தவறியது. அமைதிக்கு அழைப்பு விடுத்தாலும் கூட, போராட்டக்காரர்களின் குறைகள் தீர்க்கப்படாமல் காணப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய வன்முறையானது நிலைமையின் தீவிரத்தையும், நாட்டில் ஆழமடைந்து வரும் அரசியல் மற்றும் சமூக பிளவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உள்ள பங்களாதேஷ் நிபுணரான முபாஷர் ஹசன், எதிர்ப்புக்கள் ஹசீனாவின் ஆட்சியின் மீதான பரந்த அதிருப்தியின் வெளிப்பாடு என்று விவரித்தார்.

மாணவர்களின் எதிர்ப்பு, அடக்குமுறை நிர்வாகமாக அவர்கள் கருதும் பரந்த அதிருப்தியை பிரதிபலிக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டினேன். "அவர்கள் அரசின் அடக்குமுறைத் தன்மைக்கு எதிராகப் போராடுகிறார்கள்" என்று ஹசன் குறிப்பிட்டார்.

"உண்மையில், மாணவர்கள் அவரை ஒரு சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்". இந்த உணர்வானது சட்ட ஒழுங்கை மீட்டெடுக்கும் முயற்சியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூடுவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவால் தீவிரமடைந்துள்ளதுடன், இது நெருக்கடியின் தீவிரத்தை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார அதிருப்தி ஆகியவற்றின் பின்னணியில் அமைதியின்மை வெளிப்பட்டுள்ளதுடன், உக்ரைனில் நடந்த போர் போன்ற உலகளாவிய இடையூறுகளால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஹசீனாவின் தலைமை நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தாலும், பணவீக்கம் அதிகரித்து தொழிலாளர் அமைதியின்மை மற்றும் பெருகிய அதிருப்திக்கு வழிவகுத்தது.

நிலைத்தன்மை மற்றும் நன்மைகளுக்கான அதிகம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க பணிகள் ஆண்டுதோறும் சுமார் 400,000 பட்டதாரிகள் வெறும் 3,000 சிவில் சேவை பதவிகளுக்கு போட்டியிடுகின்ற இளைஞர்கள் மத்தியில் விரக்தியின் மையப்புள்ளியாக மாறியுள்ளன. இந்த கடுமையான போட்டி போராட்டங்களை உந்துவிக்கும் ஏமாற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், பங்களாதேஷ் அரசாங்கம் வியாழன் இரவு ஓர் பரந்த தகவல் தொடர்பாடல் முடக்கத்தை ஏற்படுத்தியது. கைத்தொலைபேசி இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டதுடன், தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை போராட்ட அமைப்பாளர்களை மேலும் தனிமைப்படுத்தியுள்ளதுடன் உள்ளூர் செய்திகள் மற்றும் சர்வதேச முன்னேற்றங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழல் போராட்டக்காரர்களுக்கும், ஆயுதமேந்திய கலகத் தடுப்புப் பொலீஸாருக்கும் இடையே பரவலான வன்முறை மோதல்களுக்கு வழிவகுத்தது. தடியடி மற்றும் செங்கற்களால் பதிலடி கொடுத்த கூட்டத்தைக் கலைக்க சட்ட அமுலாக்கப் பிரிவினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதுடன் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, டாக்கா டைம்ஸ் தலைநகரில் நடந்த மோதல்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் போது கொல்லப்பட்ட அதன் ஊடகவியலாளர்களில் ஒருவரான மெஹெதி ஹசன் இறந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்ததுடன், மேலும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக, அவாமி லீக் BNP வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது BNP தலைமையகத்தில் நடந்த சோதனைகள் மற்றும் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களின் கைதுக்கு வழிவகுத்தது. இந்த மோதல் நாட்டில் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில், ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட மேன்முறையீட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பணி ஒதுக்கீட்டை மீட்டெடுக்கும் சமீபத்திய உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நீதித்துறை தலையீடு, நடந்துகொண்டிருக்கும் மோதலில் ஒரு தற்காலிக நிவாரணத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்குமாறு போராட்டக்காரர்களை பிரதமர் ஹசீனா வலியுறுத்தி, நீதித்துறை நீதி வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவை தளமாகக் கொண்ட  பால்சில்லி சர்வதேச விவகாரங்களுக்கான பாடசாலையின் கொள்கை மற்றும் பரப்புரை முகாமையாளரான சாத் ஹம்மாடி, போராட்டங்களை அரசாங்கம் கையாள்வது குறித்து தீவிர கவலை தெரிவித்தார். அவர் வெளிப்படுத்தப்படும் நிலைமையை "ஆழமான அமைதியற்ற நிலை" என்று விவரித்ததுடன் அரசாங்கத்தின் "தொலைநோக்கு தன்மையின் பற்றாக்குறை மற்றும் வினைத்திறனற்ற கொள்கை நிர்வாகம்" என்பதன் குறிகாட்டியாக விபரித்தார்.

இணைய முடக்கத்தின் தீங்கான தாக்கத்தையும் ஹம்மாடி வலியுறுத்தியதுடன் இது அத்தியாவசிய தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், பரந்த முன்னேற்றங்களிலிருந்து பொதுமக்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமும் நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றார்.

பங்களாதேஷ் இந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணிக்கும்போது, அரசியல் அதிருப்தி, பொருளாதார விரக்தி மற்றும் கடுமையான அரசாங்க நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் தலையீடு ஒரு தீர்வைக் கொண்டுவருமா அல்லது அமைதியின்மை தொடர்ந்து அதிகரிக்குமா என்பதை தீர்மானிப்பதற்கு வரவிருக்கும் நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும்.

ஒற்றுமையுடன், மேற்கு வங்காளத்தில் உள்ள அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்களாதேஷ் மாணவர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ளனர். இடதுசாரி அமைப்புகள் மற்றும் விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்களால் சாந்திநிகேதன், கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் அணிவகுப்பு நடாத்தப்பட்டது.

பங்களாதேஷில் போராட்டக்காரர்களின் மரணத்தைக் கண்டித்தும், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வலியுறுத்தியும் எழுந்த வலுவான குரல்களால் சமூக ஊடகங்கள் சலசலப்படைந்துள்ளன.

"பங்களாதேஷ் அனுமதி தொடர்பாக அதனது சொந்த சட்டங்களைக் கொண்டுள்ளது, ஆனால் நிபந்தனைகள் மற்றும் சர்ச்சைகள் எதுவாக இருந்தாலும், அரசாங்கம் மாணவர்களைக் கேட்க வேண்டியதுடன் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வகையான வன்முறை மற்றும் அரச ஆதரவுடன் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை அனைத்து தரப்பிலிருந்தும் கண்டிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாணவர்களை கொல்ல முடியாது.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்” என்று கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியையான இஷிதா முகோபாத்யாய் கூறினார்.

எழுத்தாளர் அமர் மித்ரா, இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் உணர்வுள்ள இளைஞர்களின் கடமையையும், அவற்றுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பையும் வலியுறுத்தினார்.

அவர் மேற்கு பங்காளத்தில் மாணவர் போராட்டங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை தான் எடுத்துரைத்துள்ளதுடன் அடக்குமுறைக்கு எதிராக நிற்கும் பங்காளதேச மாணவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன் என சுட்டிக்காட்டினார்.

கூச் பீஹார் பஞ்சனன் பர்மா பல்கலைக்கழக Ph.D. மாணவரான சித்ரா அகர்வால், இந்தியாவில் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மீதான இதே போன்ற அடக்குமுறைகளை குறிப்பிட்டு எச்சரித்ததுடன், தியனன்மென் சதுக்க படுகொலை மற்றும் மாணவர் எழுச்சிகளின் இந்தியாவின் சொந்த வரலாற்றுக்கு இணையானதாக குறிப்பிட்டார்.

மேற்கு வங்க அரச பணியாளரும், விஸ்வபாரதியின் முன்னாள் மாணவருமான மைத்ராயி பால், பங்காளதேச அரசு நிலைமையைக் கையாண்டமையை விமர்சித்தார். மாணவர்களுடனான ஆரம்ப உரையாடல் வன்முறை அதிகரிப்பதைத் தடுத்திருக்க முடியும் என்று வாதிட்டதுடன், அவர் எந்தவொரு குழுவிற்கும் எதிராக பாரபட்சம் காட்டாமல் நியாயமான பணி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள் முதன்மையாக பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அவர்கள் சிவில் சேவை ஆட்சேர்ப்பில் நேர்மையை உறுதிப்படுத்த தகுதி அடிப்படையிலான முறைமையை நாடுகிறார்கள்.

அவர்களின் கோரிக்கைகள் நீதி மற்றும் சமத்துவத்திற்கான தேடலில் வேரூன்றியிருந்தாலும், ஒதுக்கீட்டை நீக்குவதற்கான குறிப்பாக வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான ஒதுக்கீட்டை நீக்குவதற்கான பொருத்தப்பாடு மற்றும் முன்னேற்றம் சிக்கலானதாகவும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளதுடன், அவதானமாக பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாட்டிற்குரியதாகும்.

பிரிட்னி மார்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரி மாணவராவார்.