பொத்துவில் மதுபானசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச்செய்யுமாறு உத்தரவு

பொத்துவில் மதுபானசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச்செய்யுமாறு உத்தரவு

பொத்துவில் பிரதேசத்திலுள்ள அருகம்பே Surfers Villaவிற்கு வழங்கப்பட்டிருந்த மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி அக்பர் ஹசன் உள்ளிட்ட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான இன்றைய தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 2020ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்தினால் Surfers Villaவிற்கு வழங்கப்பட்டிருந்த மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான சம்பத் விஜயரத்ன மற்றும் அஹ்ஷன் மரைக்கார் ஆகியோர் முன்னிலையில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்க்பபட்டுள்ளது.

சட்டத்தரணி ஆசாத் ஆதம்லெப்பை ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சட்டத்தரணி சுபுன் திசாநாயக்கவுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆஜராகினார்.