வடக்கில் மருத்துவ, பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் ஆதரவு

வடக்கில் மருத்துவ, பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் ஆதரவு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி மேற்கொண்ட வட மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த திட்டங்களுக்காக 173,659 அமெரிக்க டொலர்களை (சுமார் 50 மில்லியன் ரூபா) ஒதுக்கியுள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளில், குறிப்பாக பாதிப்புகளைத் தணிப்பதை ஊக்குவிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.

பளை பிரதேச வைத்தியசாலையில் புதிய உள் நோயாளர் பிரிவொன்றை நிர்மாணிப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார சேவையை மேம்படுத்தும் முகமாக "பளை பிரதேச வைத்தியசாலைக்கான மருத்துவ வாட்டை நிர்மாணிக்கும் கருத்திட்டம்" HDO அலுவலகத்தால் முன்னெடுக்கபடவுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட 14,927 மேற்பட்டோருக்கு சேவையாற்றும் இந்த வைத்தியசாலையானது தற்போது கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போதிய சுகாதார வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.

"வட மாகாணத்தில் செவிபுலனற்றொர் மற்றும் பார்வையற்றோருக்கான நஃபீல்ட் பாடசாலையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்" சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை முழுவதிலுமிருந்து செவிபுலனற்ற மற்றும் பார்வையற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கும் ஒரே தமிழ் மொழி நிறுவனமாக நஃபீல்ட் பாடசாலை திகழ்கின்றது. இந்த திட்டம் பாடசாலையில் மின்சார விநியோகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்த உதவும்.

வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதுவர் இசோமாட்டா மீண்டும் உறுதிப்படுத்தினார்.