'கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவ தயார்'

'கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவ தயார்'

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்கள் இன்று உதியளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் John Rohde மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Denis CHAIBI ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (24) புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தற்போது வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் செலவில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இதன்போது கலந்துகொண்ட தூதுவர்கள் தெரிவித்தனர்

கிழக்கு மாகாணத்தில் தாம் பல்வேறுபட்ட திட்டங்களை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், தொடர்ந்தும் அவற்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அலுவலகமொன்றை கிழக்கு மாகாணத்தில் அமைப்பதற்கு உதவுவதாகவும் அவர்கள் கூறினர் இதற்கு மேலதிகமாக, நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆளுநரிடம் இரு நாட்டு தூதுவர்களும் கேட்டறிந்து கொண்டனர்.

புதிய அரசு மாகாணத்தில் கல்வித் துறைக்கு முன்னுரிமை வழங்குவதுடன் மாகாணத்தின் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஆளுநர் கூறினார்.