மௌலவி அஹ்மத் முபாரக்: சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த ஆளுமை!

மௌலவி அஹ்மத் முபாரக்: சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த ஆளுமை!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) நேற்று (27) செவ்வாய்க்கிழமை காலமானார்.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள அனுதாபச் செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான அஷ்ஷைக் உஸ்தாத் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அன்னார் 1991 முதல் 2003 வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும் 2003 முதல் 2010 வரை உப தலைவராகவும் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள். 2010 முதல் இறுதி மூச்சு வரை கௌரவ பொதுச் செயலாளராக இருந்து ஜம்இய்யாவை வழி நடாத்திய ஒரு பெருந்தகையை இன்று நாம் இழந்திருக்கிறோம்.

சுமார் 33 வருடங்கள் தான் கல்வி கற்ற கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி கல்விப் பணிக்காகவும் தீனின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள்.

அன்னார் இந்நாட்டில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்கள். அன்னாரின் மறைவு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவும் பாரிய இழப்பாகும்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்ப்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளைப் பொறுத்து அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

குறிப்பு : நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அவருக்காக துஆ செய்யுமாறும், முடியுமானவர்கள் காஇப் (غائب) ஆன ஜனாஸா தொழுகை தொழுதுகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.

அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் பிரபல மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களது மறைவுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது.

மல்வானையைப் பிறப்பிடமாகக் கொண்ட மௌலவி அஹ்மத் முபாரக் (மதனி) அவர்கள் கொச்சிக்கடை பலகத்துறையில் திருமணம் செய்தார். மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து பட்டதாரியாக வெளியேறினார்.

அதன் பின்னர் மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் அதிபராகவும் நீண்ட காலம் கடமையாற்றி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி போதித்து ஆலிம்களை உருவாக்குவதில் அயராது உழைத்து வந்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் நீண்ட காலமாக தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் அபிமானம் பெற்ற முபாரக் மௌலவி அவர்கள் நாடளாவிய ரீதியில் குத்பா பிரசங்கங்களையும் நிகழ்த்தி வந்தார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி அதன் முன்னேற்றத்துக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் பல காத்திரமான பணிகளை ஆற்றியுள்ள முபாரக் மௌலவி அவர்கள்,  அதன் தலைவராக  இருந்தபோது  முஸ்லிம்  சமூகம் எதிர்கொண்ட பல்வேறுசவால்களை நிதானமாக கையாண்டார்.

மௌலவி அஹ்மத் முபாரக் பழகுவதற்கு இனிமையானவர். நடுநிலையான  போக்குடையவர். எவருடனும் முரண்பட்டுக் கொள்ளாத வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் ஆற்றல் படைத்தவர். எளிமையாக வாழ்ந்தவர். உயர்ந்த பண்பாடுகளுளைக் கொண்டவர் என்பதை அவருடன் பழகியவர்கள் நன்கறிவர்.

உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பல மாநாடுகளில் பங்குபற்றியுள்ள மௌலவி முபாரக் தேசிய மட்ட சிவில் அமைப்புக்களுடன் இணைந்தும் பணியாற்றினார். ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் நல்லுறவைப் பேணி வந்த அவர், இஸ்லாமிய அமைப்புகளின்  நன்மதிப்பை  பெற்ற  ஒருவராகவும்  திகழ்ந்தார்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், ஆலிம்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு அல்லாஹுத் தஆலா அழகிய பொறுமையையும் ஆறுதலையையும் வழங்க வேண்டுமென்றும் அவரது சன்மார்க்க, சமூகநலப் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டுமெனவும் உயர்வான சுவனத்தை அருள வேண்டுமெனவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பிரார்த்திக்கிறது.
 
எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி)
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் நாடறிந்த மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களது மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

அண்மைக் காலமாக சுகயீனமுற்று தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஏ. முபாரக் மௌலவி அவர்கள் தனது 71வது வயதில் இன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது மறைவு, முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக ஆலிம்கள் மத்தியில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

கபூரிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய முபாரக் மௌலவி அவர்கள் நூற்றுக்கணக்கான ஆலிம்களை உருவாக்கியதில் மகத்தான பங்களிப்புச் செய்தவர்.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இருந்தபோது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை நிதானமாக கையாண்டவர். பின்னர் ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக இருந்து தனது பணியை இறுதி வரை செவ்வனே நிறைவேற்றி வந்தார்.

இலங்கை ஆலிம்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த முபாரக் மௌலவி அவர்கள் சன்மார்க்க, சமயப் பணிகளுக்கு அப்பால் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தாதர். தேசிய மட்ட சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக விவகாரங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வந்த அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிகழ்வுகளிலும் அதிதியாக, பிரமுகராக பங்கேற்று போரத்தின் வளர்ச்சிக்காக தனது ஆலோசனைகளை வழங்குபவராக இருந்தார்.

மட்டுமன்றி, ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுடன் மிகவும் சுமுகமான உறவைக் கொண்டிருந்த அவர்இ இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளின் மனதை வென்ற ஒருவராகவும் திகழ்ந்தார்.
 
இங்கிதமாக பழகும் சுபாவம், நிதானமான போக்கு, எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற பாங்குஇ கருத்து வேறுபாடுகளின்போது முரண்படுவோரைக் கையாளும் விதம் என்பன அவரது ஆளுமைக்கு மெருகூட்டிய அம்சங்கள் என்றால் மிகையாகாது.
 
வல்ல இறைவன் அவரது சமய, சன்மார்க்க, சமூகப் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டுமெனவும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், ஆலிம்கள், சமூகப் பணியாளர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமைய வழங்க வேண்டுமெனவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றோம்.
 
என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்