ஆயுஷ் புலமைப்பரிசிலிற்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

ஆயுஷ் புலமைப்பரிசிலிற்கு  இலங்கை மாணவர்களிடமிருந்து  விண்ணப்பம் கோரல்

ஆயுஷ் புலமைப்பரிசிலிற்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2021-22 கல்வியாண்டில் ஆயுள்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.

இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுடன் தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகையும் வழங்கப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக ICCR வழங்கும் சகல புலமைப்பரிசில்களுக்கும் சுகாதார நலன்புரி சேவைகள் முழுமையாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk  இணையதளத்தில் காணமுடியும். அத்துடன் வேறு தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளலாம் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605).