தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: நாமல்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: நாமல்

பேரின்பராஜா சபேஷ்

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌, இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார்.

ராஜபக்‌ஷ குடும்ப பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வந்தாறுமூலை டயமன் விளையாட்டுக்கழக மைதானம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரகளான் சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், அரசாங்க அதிபர் எஸ். கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைகையில்,

"தேவையற்ற விதத்தில் இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய அவசியம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்கள் நாட்டின் பெறுமதிளான சொத்துக்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடங்களைச் செய்ய முடியவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடங்களைப் பின்பற்ற வேண்டும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  பேஸ்புக்கில், புகைப்படங்களை பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நீதித்துறையுடன் பேசி, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும். குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எமது அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூச்சல் இடுவதானாலோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதனால் எவ்விதமான பயனும் கிடைக்காது.

சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் தெரியவந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் அவ்வாறான நிலையில் சாட்சியமளிக்க நாங்களும் வருகிறோம். எமக்கு எதிராக கூச்சலிடுவது பொலிஸாரின் புத்தகங்களில் பதியப்படுவதில்லை.  சட்ட ரீதியன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.