உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுதலை

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுதலை

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (ஜனவரி 11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் கடந்த 2021 மார்ச் 12ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரது கைது மற்றும் தடுத்து வைத்தல் சட்டவிரோதமானது என்றும் இலங்கையின் அரசியல் அமைப்பு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் மீறல் எனவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மனு மீதான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 2021 டிசம்பர் 17ஆம் திகதி மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரை பிணையில் விடுவிப்பதற்கு  சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே 2019 ஆகஸ்ட் 25ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்பு (சி.சி.டி) பிரிவினரால் கைது செய்யப்பட்டு 32 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக எந்த விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியமில்லை என 2019.08.25அன்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் (CTID) நீதிமன்றில் சமர்பித்த விண்ணப்பத்தின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.