20ஐ ஆதரித்த மு.கா எம்.பிக்களுக்கு மன்னிப்பு

20ஐ ஆதரித்த மு.கா எம்.பிக்களுக்கு மன்னிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோரியுள்ளமையால் , அவர்களை மன்னிக்கத் தீர்மானித்துள்ளளோம் என கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார்.

அரசியல் உச்ச பீடம் ஏற்கெனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதால் மன்னிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விவகாரம் நிறைவடைந்துவிட்டது என்று தெரிவித்த ஹக்கீம், அவர்களிடமிருக்கும் வேறு திறமைகளைக் கருத்திற் கொண்டு கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குகக் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

“கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான, பொறுப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற முடிவு கட்சியினுடையதல்ல. கட்சி என்றாலும் சில விவகாரங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

கட்சியின் தீர்மானத்துக்கு அப்பாற்சென்று யாராவது செயற்படுவார்களாயின், கட்சி யாப்புக்கமைய என்ன செய்யவேண்டுமோ அதனை செய்திருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், அந்த அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.