ஐக்கிய நாடுகள் சபையுடனான சவூதி அரசின் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையுடனான சவூதி அரசின் பயணம்

இன்று (அக்டோபர் 24) அனுஷ்டிக்கப்படும் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியினால்  வெளியிடப்பட்ட கட்டுரை

ஒடோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்ற சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு சுட்டிக்காட்டத்தக்கது.

சவூதி அரேபியா 1945ம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ உறுப்பினராக இணைந்து கொண்டது.

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் சவூதியின் அரசியல் ரீதியான செல்வாக்கு மற்றும் முன்னோடியான கதாப்பாத்திரத்தை வகிக்கின்றமையின் அடிப்படையிலும், ஐ.நா சபையின் சாசனத்தின் கொள்கைகளுக்கு இணங்கவும், உலக நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமைந்த சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு, ஐ.நா சபையில் உருப்புரிமை பெற்ற நாள் தொடக்கம் சவூதி அரேபியா தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறது.

ஆக்கபூர்வமான உரையாடல், மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல் போன்ற செயற்காடுகள் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்னும் செயல்பட்டு வருகிறது.

அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகளுடைய பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மேடைகளில் சவூதி அரேபியத் தலைவர்கள் குரலெழுப்பியருக்கிறார்கள்.

மேலும் சர்வதேச பாதுகாப்பு, சமாதானம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நாகரிகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் போன்றவைகள் தொடர்பாக சவூதி தலைமைகள் தொடர்தேர்ச்சியான ஆர்வம் காட்டியுள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இது தொடர்பாக குரலெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக மக்களிடையே உண்மை, சகோதரத்துவம், நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் மனித உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் சவூதி அரசாங்கம் செயற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதியின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களில் வருடாந்திர பங்கேற்புடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக ஐக்கிய நாடுகள் சபை, அதன் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கு நிதி, தளவாட மற்றும் பல வகையான முறைமைகளின் மூலம் ஆதரவளிப்பதற்கான அதன் ஆர்வத்தையும் முயற்சியையும் சவூதி எப்போதும் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தமையை ஐக்கிய நாடுகள் சபையை ஆதரிப்பதில் சவூதியின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக குறிப்பிட முடியும்.

செப்டம்பர் 2011 இல், ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடங்கப்பட்ட போது சவூதி அரேபியா தனது பங்களிப்பாக பத்து மில்லியன் அமேரிக்க டொலர்களை அவ்வமைப்பின் மூன்று ஆண்டுகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதாக வழங்குவதாக அறிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் சவூதி வழங்கிய ஆதரவுகளில் மிக முக்கிய அம்சமாக, 2011 ஒக்டோபர் 13 அன்று மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் உலகளாவிய பேச்சுவார்த்தை மையத்தை' நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையை சுட்டிக் காட்டலாம்.

உலக உணவுத் திட்டம், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) உட்பட பல ஐக்கிய நாடுகளின் நிதியங்களுக்கு நன்கொடை வழங்குவதன் மூலம் இயற்கை பேரழிவுகளின் விளைவுகளைக் குறைத்தல், வறுமை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல அம்சங்களில் ஐ.நா சபைக்கு சவூதி அரேபிய இராச்சியம் பக்க பலமாக இருந்துள்ளது.

பல்வேறு துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றாக சவூதி அரேபியா இருந்து வந்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு அதன் ஆதரவை வழங்கும் நோக்கோடு பல நன்கொடைகளை அளித்துள்ளது.

439,583,602 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையான நிதிப் பங்களிப்பை ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய இராச்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.